பறிமுதலாகும் ஜெ, சசி சொத்துக்கள் வெறும் ஜுஜுபியாம்.. அபராதத் தொகையை வசூலிக்க போதாதாம்!
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அபராதத் தொகைக்கு ஈடானது அல்ல என்று தெரிய வந்துள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தமிழக அரசால் பறிமுதல் செய்யப்படவுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் சொத்துகள் அபராதத் தொகைக்கு ஈடானது அல்ல என்பதால் அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அபராதத்துக்கு ஈடு கட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் அவரது அபராதத் தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் அபராதத் தொகையை வசூலிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள 68 சொத்துகள் அடையாளம் காணப்பட்டு விட்டது.
இவற்றை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் தமிழகத்தை சேர்ந்த 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகளை பறிமுதல் செய்தாலும் அது அபராதத் தொகைக்கு ஈடானது அல்ல. இதனால் அவர்கள் 3 பேரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அபராதத்துக்கு ஈடுகட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.