ஒரு கையில் சரக்கு.. இன்னொரு கையில் பட்டாக்கத்தி.. தெருவில் சாவகாசமாக நடந்து பீதி கிளப்பும் ரவுடிகள்
பட்டாக்கத்தியுடன் வலம் வரும் ரவுடிகள் வீடியோ வெளியாகி உள்ளது
Recommended Video
கும்பகோணம்: ஒரு கையில் சரக்கு.. இன்னொரு கையில் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி சாவகாசமாக ரவுடிகள் நடந்து செல்லும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் - தஞ்சை சாலையில் பழைய டைமண்ட் தியேட்டர் உள்ளது. இதன் அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
கடந்த 2ம் தேதி 2 பேர் இந்த கடைக்கு வந்தனர். அப்போது சுமார் ஆயிரம் ரூபாய்க்கு பீர் உள்ளிட்ட மதுபானங்களை வாங்கினார்கள். எல்லாவற்றையும் வாங்கி ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் கிளம்ப முற்பட்டார்கள்.
அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் வாங்கின சரக்குக்கு பணம் கேட்டார்கள். பாக்கெட்டுக்குள் கையை விட்ட 2 பேரும், திடீரென பட்டா கத்தியை வெளியே எடுத்து ஊழியர்களை மிரட்டினர். கத்தியை பார்த்ததும் ஊழியர்கள் வாயடைத்து பீதியில் நின்றுவிட்டனர். அதில் ஒருவர், அந்த கத்தியை தன் முதுகில் சொருகிக் கொண்டு கெத்தாகவும், சாவகாசமாகவும் தெருவில் நடந்து செல்கிறார்.
இதெல்லாம் அங்கிருந்த சிசிடிவி காமிராவிலும் பதிவாகி உள்ளது. ஊர் முழுக்க காமிரா இருப்பது தெரிந்தும் ரவுடிகள் கத்திகளுடன் வலம் வருவது பொதுமக்களிடையே மட்டுமில்லாமல், டாஸ்மாக் ஊழியர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.