கடலூர் கடற்கரையில் ஊர்ந்த அரியவகை பாம்புகள்- ஆச்சரியமடைந்த பொதுமக்கள்
கடலூரில் அரிய வகை பாம்புகள் கடற்கரையில் கரை ஒதுங்கியதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.
Recommended Video
கடலூர்: கடல் சீற்றத்தினால் கடந்த இரு தினங்களாக கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடலில் ஏற்பட்ட மாற்றத்தினால் கடலூர் கடற்கரையில் அரிய வகை பாம்புகள் உயிருடன் ஊர்ந்து சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால் பல்வேறு மாவட்டங்களில் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் கடந்த இரு தினங்களாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று சீற்றம் இல்லாமல் அலைகள் வழக்கமான அளவே எழுந்து அடங்கின.
இந்நிலையில், கடலூர் தாழங்குடா கடற்கரை ஓரத்தில் இன்று காலை ஆழ்கடல் பவளப்பாறையில் வசிக்கும் பாம்புகள் உயிருடன் கரையில் ஊர்ந்து சென்றதை சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து, மீனவர் பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் கடற்கரை பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். பலர் கடற்கரையோரமாக பாம்புகள் ஊறி செல்வதை செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.
பின்னர் மீனவர்கள் அனைவரும் இந்த அரியவகை பாம்புகளை பிடித்து மீண்டும் கடலில் கொண்டு போய் விட்டனர். ஆனாலும் பாம்புகள் மீண்டும் கரையை நோக்கியே வந்தன. இதைதவிர, தாழங்குடா பகுதியில் இறந்த நிலையில் ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியதையும் இன்று காலை கடற்கரைபகுதி மக்கள் பார்த்துள்ளனர். திமிங்கலம் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: இந்த அரியவகை பாம்புகள், நாங்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் போது ஏதோ ஒரு சில நாட்களில் பார்த்திருக்கிறோம். மற்ற நாட்களில் இந்த வகை பாம்புகளை பார்க்க முடியாது. பெரும்பாலும் இந்த வகை பாம்புகள் பவளபாறைகள் அருகில் இருந்து வரும். தற்போது கடற்கரையில் நாங்கள் பார்த்தது எங்களுக்கு ஆச்சரியம் கலந்து சந்தோஷமாக இருந்து உள்ளது.
கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த அரிய வகை பாம்புகள் மற்றும் இறந்த திமிங்கலம் கரை ஒதுங்கி இருக்கலாம். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என்றனர்.