திரையரங்குகளில் வெற்றி நாட்டிய ‘தீரன்’.... உண்மையான தீரன் யார் தெரியுமா ?
தீரன் திரைப்படத்தில் வரும் தீரன் கதாப்பாத்திரம் குறித்த கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தீரன் திரைப்படம் பல தரப்பினராலும், பாரட்டுப்பெற்று வருகிறது. இதில் உண்மையான தீரன் யார் என்கிற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.
வினோத் ஹரிமூர்த்தி இயக்கத்தில், கார்த்திக் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் 'தீரன்'. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் கதை என்று பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் பார்த்த எல்லோருக்கும் எழும் முதல் கேள்வியே, உண்மையில் யார் அந்த தீரன்? என்பதே.
1994 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் உள்ள வீடுகளை கொள்ளையடித்த கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரிகள் குறித்த இந்தக் கதை ஒரு உண்மைச் சம்பவம். படத்தில் தீரனாக சித்தரிக்கப்பட்டது அப்போதைய ஐ.ஜி.,யாக இருந்த ஜாங்கிட் ஐ.பி.எஸ் தான். இவர் தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.ஜி.பி.,ஆக இருக்கிறார்.
தொடர்ந்த கொள்ளை சம்பவங்கள்
வடமாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வரும் லாரி ஓட்டுனர்கள் திரும்பிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் இருக்கும் வீடுகளைத் தாக்கி அங்கு இருப்பவர்களை கடுமையாகத் தாக்கி கொள்ளையடித்துச் செல்வதே வழக்கமாகி இருந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் தென்மாநிலங்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட சம்பவங்கள் ஒரே மாதிரியான முறையில் செய்யப்பட்டன. அப்போதைய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனமும் இந்தக்கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
தனிப்படைக்கு கிடைத்த தடயம்
அதன்பின்பே ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. எந்தத் தடயமுமே விட்டுச்செல்லாமல் இருந்த அந்த கொள்ளையர்கள், அவரது தலைமையிலான தனிப்படைக்கு விட்டுச்சென்ற ஒரு விஷயம். ஒரு ஜோடி காலணிகளும், சிலபல கைரேகள் மட்டுமே. தொடர்ந்து நடந்துகொண்டிருந்த கொள்ளைகள் 1996ல் இருந்து 2000 வரை நடக்கவில்லை என்பதும் இன்னொரு விஷயம்.
பவேரியாக்களின் திருட்டு ஸ்டைல்
வடமாநிலத்தில் இருக்கும் கொள்ளைக்குழுக்கள் பற்றித் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பவேரியா இனக்குழு மட்டும் தான் இந்த வகையில் கொள்ளை அடிக்கும் முறையை பின்பற்றுவார்கள் என்பதைக் கண்டறிந்தார் ஜாங்கிட் (படத்தில் ஹவேரியா என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்) அவர்களில் ஆக்டிவாக இருக்கும் குழுக்கள் பற்றி விசாரணை மேற்கொண்டார்.
சிக்கிய முதல் குற்றவாளி
நான்கு ஆண்டுகள் செயல்படாமல் இருந்ததால், எதாவது ஒரு விஷயத்தில் சிறையில் இருந்து இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்த ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை, வட மாநில சிறைச்சாலைகளுக்குச் சென்று கெஜட்டில் உள்ள கைரேகையோடு தங்களிடம் இருந்த கைரேகையை வைத்து ஆராய்ந்தது. ஆக்ரா சிறைச்சாலையில் இருந்த லக்ஷ்மண் பவேரியா என்பவன் இதில் பிடிபட்டான்.
சிக்கினான் ஓமா
அவனை வைத்து அவர்களது சூத்திரதாரி தரம்சிங் பவேரியா, தலைவன் ஓம்பிரகாஷ் பவேரியா(ஓமா) ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டனர். பல கட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் என சுற்றி 2 பேரை என்கவுண்டர் செய்து, 13 பேரை கைது செய்தது ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை. இதற்கு 10 மாதங்களுக்கு மேலான வடமாநிலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணியாற்றி இருந்தனர் தனிப்படையினர்.
ஜாங்கிட்டின் ஜூனியர்கள்
இந்தப்படையில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் இப்போது காவல்துறையில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில் இத்திரைப்படத்தைப் பற்றியும், ஜாங்கிட் குறித்தும் செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்கள் அவர்களதூ ஜூனியர் அதிகாரிகள் பலர்.
கஷ்டமான கைரேகை பணி
மேலும், இந்த வழக்கில் முக்கியமான பணி. எந்த டிஜிட்டல் தொழில்நுட்பமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான கைரேகையை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் அதைச் செய்தவர் தனஞ்செழியன் என்பவர், தற்போது ஓய்வு பெற்றுவிட்ட அவரையே இந்தத் திரைப்படத்தில் கைரேகை நிபுணராக நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் வினோத்.
போலீஸாரின் கஷ்டம்
சில ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் இந்த சம்பவத்தைக் குறித்து கேட்டார் திரைப்படத்தின் இயக்குநர் வினோத். தற்போது அதை அருமையாக படமாக்கி இருக்கிறார் என்றும் . இதுகுறித்த தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜாங்கிட் ஐ.பி.எஸ். தனிப்படை போலீஸாரின் பணி எத்தனை கடுமையானது என்பது இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.