ஒரு மாணவரும் இல்லாத பரிதாப அரசு தொடக்கப் பள்ளி.. மூடப்படும் அபாயம்!
பள்ளி மாணவர்கள் ஒருவரும் இல்லாததால் அரசு பள்ளி மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆலங்குடி: ஆலங்குடி அருகே படிக்க ஒரு மாணவர் கூட இல்லாததால், அரசு தொடக்கப்பள்ளியை மூடும் அபாயமும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பகுதி வாழைகொல்லை. இங்கு சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவ, மாணவிகள் ஆலங்குடி, மழையூரில் உள்ள பள்ளிகளுக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியிலேயே தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படியே வாழைக்கொல்லையில் அரசு தொடக்கப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் வருகை தந்து படித்து வந்தனர்.
புதிய பள்ளி திறப்பு
இதேபோல, முருங்கக்கொல்லை என்ற ஊர் அதே பகுதியில் உள்ளது. அங்குள்ள குழந்தைகள் வாழைக்கொல்லை, மேட்டுப்பட்டி பள்ளிகளுக்கு சென்று வருவதால், தங்கள் பகுதியிலும் அரசு பள்ளி அமைக்க வேண்டும் என 15 வருடமாக கோரிக்கை விடுத்தனர். ஒருவழியாக அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று, கடந்த 1-ம் தேதி புதிய பள்ளி முருங்கக் கொல்லையில் திறக்கப்பட்டது.
அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வாழைக்கொல்லையில் கடந்த 1-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. ஆசிரியர்களும் விடுமுறை முடிந்து அன்றைய தினம் உற்சாகத்துடன் பள்ளி சென்றனர். ஆனால் அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முருங்கக்கொல்லை கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிந்தது. சரி விடுமுறையில் ஊருக்கு சென்றிருக்கலாம் என்று 2 நாள் ஆசிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்போதும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
எண்ணிக்கை குறைந்தது
இதனால் வாழைக்கொல்லை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் 2 பேர் நேரடியாக விசாரித்தனர். அப்போது புதிதாக முருங்கக்கொல்லை பகுதியில் பள்ளி திறக்கப்பட்டதால், தங்களது பிள்ளைகளை அங்கு அனுப்பிவிட்டதாக சொன்னார்கள். மேலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆலங்குடி, கே.ராசியமங்கலத்தில் உள்ள ஆங்கில பள்ளியில் படிக்க வைப்பதாகவும் கூறிவிட்டனராம். இதேபோல், மேட்டுப்பட்டி, தீத்தானிப்பட்டியில் பள்ளியில் பயின்ற மாணவர்களில் சிலர் முருங்கக்கொல்லையில் புதிதாக தொடங்கப்பட்ட பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால், மேட்டுப்பட்டியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளின் சவால்
மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், ஆண்டுதோறும் திண்டாடி வருகின்றன. அரசு பள்ளிகளுக்கு பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய ஒரே சவாலாக உள்ளது. தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் பிஞ்சு கால்களுடன் பல மாணவர்கள் தொலைதூரம் நடந்து சென்று கல்வி கற்கும் நிலை இன்றும் உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரம் காரணமாக சொந்த கிராமத்தில் போராடி பெற்ற பள்ளிக்கூடத்தை இப்படி நிர்க்கதியாய் விடுவது பெற்றோர்களுக்கு நியாயமா? கிடைத்த பள்ளியை மூடவிடாமல், அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முன்வரவேண்டும்.
மீட்டெடுக்க களம் காண வேண்டும்
அதேபோல, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமப்புற பள்ளியும் புறக்கணிக்கப்பட்டு மூடப்படும் நிலைக்கான காரணத்தை ஆசிரியர்களும், தமிழக அரசும் அறிந்து கொண்டு அதனை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் ஊதிய போராட்டங்களை முன்னெடுப்பது போல, அரசு பள்ளிகளையும் மீட்டெடுக்க களம் இறங்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் போனால் எத்தனையோ ஆசிரியர்களின் பணியிடங்களும் இல்லாமல் போகும் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுவது தற்போதைய உடனடி கட்டாயமானதாகும்.