குடிகாரர்களே எனக்கு வாக்களிக்காதீர்கள்... பின்னோக்கி நடக்கும் வேட்பாளர் ‘மனிதன்’ வேண்டுகோள்!
திருவண்ணாமலை: மதுவுக்கு அடிமையானவர்கள் தயவுசெய்து தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளோடு திருவண்ணாமலை தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் மனிதன் என்ற சுயேட்சை வேட்பாளர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனிதன் (47). இவர் பின்னோக்கி நடக்கும் பழக்கமுடையவர். நேற்று திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்நோக்கியே நடந்து வந்த மனிதன் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அ.ஞானசேகரனிடம் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மனிதன் கூறியதாவது :-
ஜனாதிபதி ஆவதே லட்சியம்....
1999-ஆம் ஆண்டு ஜூன் 16 முதல் பின்நோக்கி நடக்கத் தொடங்கினேன். உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல் என அனைத்திலும் மனு தாக்கல் செய்துள்ளேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் முன்னோக்கி நடப்பேன்.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் டெபாசிட்....
ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகை என்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவதாக உள்ளது. இத்தொகையில் இருந்து ரூ.5 ஆயிரம் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் டெபாசிட் தொகை செலுத்தவில்லை.
டாஸ்மாக் கடைகளை அகற்றுவேன்...
நான் வெற்றி பெற்றால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவேன்.
குடிமகன்கள் வாக்களிக்காதீர்கள்...
குடிகாரர்கள் யாரும் எனக்கு ஓட்டு அளிக்கக் கூடாது. இப்போது நான் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெபாசிட் கட்டவில்லை...
வேட்புமனுத் தாக்கல் செய்த மனிதனை யாரும் முன்மொழியவில்லை, மேலும், வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது கட்ட வேண்டிய டெபாசிட் தொகையான ரூ 25 ஆயிரத்தையும் அவர் கட்டவில்லை.
நிராகரிப்பு....
ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்த போதும், இதுவரை ஒரு தேர்தலில் கூட மனிதனின் வேட்புமனு ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.