தாய் பலியான சோகத்திலும் அழுதுகொண்டே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மகன் - கோவையில் நெகிழ்ச்சி
தாய் இறந்த நிலையிலும் மாணவர் ஒருவர் நேற்று 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்துள்ளார்.
கோவையில் தாய் பலியான சோகத்திலும் மகன் நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் மதுரை வீரன் கோவில் விதியை சேர்ந்தவர் பிளம்பர் ராமச்சந்திரன், 36. இவரது மனைவி வெங்கடேஸ்வரி 32, இவர்களது மகன் அன்புச்செல்வன் 15, கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அவருக்கு எஸ்எஸ்எல்சி பொது தேர்வு நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரனும், வெங்கடேஸ்வரியும் இடையர்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வெங்கடேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வெங்கடேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து, வெங்கடேஸ்வரியின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்புச்செல்வனுக்கு எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் தேர்வு 2ஆம் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதனை வெங்கடேஸ்வரின் மகன் அன்புசெல்வம் எழுதிவிட்டு வந்தார். அப்போது அவர் அழுதுகொண்டே தேர்வு எழுதியது அங்கிருந்தோரின் நெஞ்சை உருக்குவதுபோல் இருந்தது.
தாய் இறந்துவிட்டதால், அன்புச்செல்வன் சிறப்பு அனுமதியாக எப்போது வேண்டுமானாலும் தேர்வு அறையை விட்டு செல்லலாம் என ஆசிரியர் கூறியபோதும் அன்புச்செல்வன் முழு தேர்வையும் எழுதி விட்டுதான் வந்தார்.