ஈழ சோகத்தின் ஏழாவது ஆண்டு... பொழுதுபோக்குகளில் பிஸியாகிவிட்ட மக்கள்!
சென்னை: மே 18... இந்த உலகம் எத்தனை பாரபட்சமானது... கண்மூடித்தனமானது என்பதை நிரூபித்த நாள்.
மீண்டும் இலங்கை ஆகிவிட்ட ஈழத்தில் இந்த ஒரு நாளில் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட நாள்.
'நான் செத்துக் கொண்டிருக்கிறேன்... என் கண்ணெதிரே ஆயிரமாயிரமாய் பிணங்கள்... அந்தப் பிணங்களின் மீதே ராணுவ வண்டி ஒன்று ஏறிப் போவதைப் பார்த்தபடி என் உயிர் பிரிகிறது,' என ஒரு செய்தியாளர் போர் முனையிலிருந்து அனுப்பிய ஆடியோ இன்னும் கூட காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சின்னச் சின்ன நாடுகளிலெல்லாம் பெரும் இனப்படுகொலை நடந்துவிட்டதாகக் கூறி, தனி நாடு பெற்றுத் தந்த சர்வதேசம், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டது. அது இனப்படுகொலையாக மட்டுமல்ல, சாதாரண கொலையாகக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த இனப்படுகொலைக்கு எதிராக எத்தனை ஆவணப் படங்கள், எத்தனை சாட்சியங்கள், எத்தனை வீடியோக்கள், எவ்வளவு விசாரணை அமைப்புகள்? ஆனால் கண்ட பலன் என்ன?
சர்வதேச அமைப்புகளும், ஐநா என்ற பொம்மை அமைப்பும் இயற்றிய தீர்மானங்களால் ஒரு பலனும் கிடைக்கவில்லை ஈழத் தமிழர்களுக்கு. மக்கள் புதுப்புது பொழுதுபோக்குகளில் பிஸியாகிவிட, ஈழத் தமிழர்களும் 'இனி எதையும், யாரையும் நம்பி பலனில்லை. தனி நாடாவது இன்னொன்றாவது... அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு வாழ்வோம்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். ஈழம் என்ற சொல்லை உச்சரிப்பதைக் கூட கைவிட்டு விட்டனர்.
கொழும்புப் பகுதியில் உள்ள தமிழர்கள் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கவும் விரும்பவில்லை. அது வேறு உலகமாகிவிட்டது.
இலங்கையின் வடக்குப் பகுதிக்குள் நுழைந்தாலே நம் கண்ணுக்கே தெரியாமல் நம்மை ஏராளமான கண்கள் பின்தொடர்வதைப் போன்ற உணர்வு இருப்பதாக பலர் கூறுகின்றனர். இன்னும் ராணுவத்தின் பிடியில் காணிகளை இழந்து தவிக்கும் மக்கள் ஒருபக்கம், சுற்றுலா என்ற பெயரில் பெருகும் கலாச்சார விரோதம், விபச்சாரம்...
கொழும்பிலிருந்து வன்னி, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு பளபள சாலைகள் போட்டுவிட்டார்கள். ஆனால் அந்தப் பகுதிகளின் கிராமங்களில் வாழும் மக்கள் நிலை எந்த வகையிலும் மேம்படவில்லை. நோய், வறுமை இந்த இரண்டும் அவர்களை கொன்றழித்துக் கொண்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.
பாலஸ்தீனம், குரேஷியா, கிழக்கு தைமூர், கொசோவா என போராட்டம் வெடித்த நாடுகளுக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைத்துள்ளது. ஆனால் 35 ஆண்டுகளாகப் போராடிய தமிழர்களுக்கு கிடைத்தது கொடூர மரணங்களும், நோயும் பட்டினியும்தான்!
தமிழர்களின் அவலத்தைப் போக்க அவர்களின் தாயகமான இந்தியாவும் கைகொடுக்கவில்லை... சர்வதேசமும் கைகொடுக்கவில்லை.
ஆண்டுகள் போகப் போக, இந்த கொடிய சோகத்தை தமிழர்களே கூட மறந்துவிட்டு கேளிக்கைகளில் மூழ்கிப் போயுள்ளார்கள்.
தமிழன்டா!