அரக்கோணம் பள்ளி மாணவிகள் தற்கொலை ஏன் ?: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
பணப்பாக்கத்தில் நான்கு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
வேலூர் : அரக்கோணம் அருகே பணப்பாக்கம் அரசுப்பள்ளி நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
மாணவிகள் நான்கு பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மாணவிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. பதற்றமான சூழ்நிலையால் அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நான்கு தனிப்படைகள் அமைப்பு
மாணவிகள் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.முதற்கட்ட விசாரணையில் மாணவிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த பருவத் தேர்வுகளில் மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி உள்ளிட்ட சில 11ம் வகுப்பு மாணவிகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லி திட்டி இருக்கிறார்கள்.
திட்டிய தலைமை ஆசிரியர்
ஆனால், மாணவிகள் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வராததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமாமணி ள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் மாணவிகளை மற்ற மாணவர்கள் முன் திட்டி, வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்ததாகத் தெரிகிறது. மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த மாணவிகள் மோனிஷா, ரேவதி,தீபா, சங்கரி உள்ளிட்ட ஆறு பேர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
கிணற்றில் குதித்த மாணவிகள்
இதனையடுத்து பள்ளிக்கு மூன்று கிலோமீட்டர் அருகே உள்ள பாழடைந்த விவசாயக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து அங்கு சென்றிருக்கிறார்கள். மோனிஷா முதலில் கிணற்றில் குதித்ததை அடுத்து ரேவதி, தீபா, சங்கரி ஆகியோரும் கிணற்றில் குதித்துள்ளனர். அவர்கள் மூச்சு திணறுவதைப் பார்த்த மற்ற இரண்டு மாணவிகள் பயந்து போய் கிணற்றில் குதிக்காமல், அருகில் இருந்த கிராமத்திற்கு சென்று மக்களை அழைத்து வந்து இருக்கிறார்கள்.
தொடரும் மாணவிகள் தற்கொலைகள்
கிராமத்தினர் வந்து கிணற்றில் மூழ்கிய மாணவிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளின் உடலை மீட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.