தலைமறைவான பைனான்சியரின் வெளிவராத திடுக்கிடும் பின்னணி!
இணை தயாரிப்பாளரின் தற்கொலையில் தலைமறைவாக இருக்கும் பைனான்ஸியர் குறித்த திடுக் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Recommended Video
சென்னை: சினிமா இணைதயாரிப்பாளர் ஒருவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவத்தால் தமிழ் சினிமா தற்போது ஆடிப்போய் இருக்கிறது.
ஏன் இந்த மரணம் ? யார் காரணம் ? குறிப்பிட்ட ஒருவர் மட்டும் தான் காரணமா? அவரது பிண்ணனி என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடினால் அது வளர்ந்துகொண்டே போகிறது. இதை எல்லாம் கேட்டால் சாதாரண மக்களுக்கு தலையே சுற்றிவிடும் அந்த அளவிற்கு கொட்டிக்கிடக்கிறது இந்த மரணத்திற்கு பின்னால் உள்ள விஷயங்கள்.
மதுரையில் சின்னதாக வட்டிக்கடை நடத்திக்கொண்டு இருந்த பைனான்ஸியருக்கு, தோட்டத்தின் முக்கியப் புள்ளியிடம் இருந்து தென்மாவட்ட நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவருக்கு போன பணத்தில் கொக்கி போட்டதில் தான் இவ்வளவு பெரிய ஆள் ஆனாராம் நமது பைனான்ஸியர்.
இங்கு கொடுப்பதை விட சென்னையில் சினிமாகாரர்களுக்கு கடன் கொடுத்தால் நிறைய திரும்ப வரும் என்று சிலர் ஐடியா கொடுக்க சென்னை வந்து கடை போட்டாராம். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாகாரர்களின் நம்பிக்கைக்குரிய பைனான்ஸிரும் ஆகியும் இருக்கிறார்.
தயாரிப்பாளரின் மரணம்
அப்படியும் சில இடங்களில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துகளும் நடந்து இருக்கின்றன. பிறரை விர குறைவான வட்டிக்கு சொன்ன நேரத்தில் கேட்ட பணம் கிடைப்பதால் சினிமாக்காரர்கள் இவரை மொய்த்து இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு மணியான இயக்குநரின் அண்ணன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து இறந்தபோதும் அடிபட்டது இதே பைனான்ஸியரின் பெயர் தான். அப்போது தோட்டத்து சின்ன அன்னையின் பெயரை சொல்லி தப்பித்தார். அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சூரியன் மலர்ந்தபோதும், சின்னவரின் வாரிசோடு ஜோடி போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சமரசம் பேசிய இயக்குநர்
நாளுக்கு நாள் அந்த பைனான்ஸியரிடம் கடன் வாங்கும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கையும், அதை திருப்பி வாங்க அவரது அடாவடியும் அதிகரித்துக்கொண்டே போனது. சமீபத்திய தற்கொலையில் தான் அவரது பெயர் வெளியே வந்து இருக்கிறது. அதுவும் அவர் எழுதிய கடிதத்தால், அதையும் வெளிவிடாமல் செய்யவும், போலீஸிடம் போகாமல் சமரசம் பேசவும் கடவுளான படத்துக்கு தேசிய விருது வாங்கிய இயக்குநர் ஒருவரால் பஞ்சாயத்து பேசப்பட்டது.
மனம் மாற்றிய இயக்குநர்
பஞ்சாயத்து எல்லாம் சரிவராது போலீஸிற்கு போகலாம் என்று அழைத்துச் சென்றது வீரனான தாடிக்கார இயக்குநர் தான். ஏற்கனவே லிங்கமான இயக்குநர், முக்கிய நடிகர் உள்ளிட்ட பலரும் இந்த பைனான்ஸியரால் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள். இனியும் நாம் பொறுமையாக இருக்க முடியாது என்று சுப்பிரமணியபுர நடிகரை மனம் மாற்றி இருக்கிறார். இதனால் கோபமான அந்த தேசிய விருது இயக்குநர் கோபமாக அப்போதே மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
கருப்புப்பணம் மாட்டிக்கொண்டது
தேசிய இயக்குநர் இதில் தலையிடக்காரணம் அந்த இயக்குநரும், பிரச்னையில் சிக்கிய பைனான்ஸியரும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது அரசியலில் வாசம் வீசிக்கொண்டிருக்கும் தேனி மாவட்டத்துக்காரருக்கும், இன்னும் சில அமைச்சர்களுக்கும் மிக முக்கியமான அந்த பைனான்ஸியரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சிலர் போராடி வருகிறார்கள். சாதிப்பாசத்தோடு, அவர்களின் கோடிக்கணக்கான கருப்புப்பணமும் அவரிடம் தான் இருக்கிறதாம்.
சொன்ன நேரத்தில் பணம்
இந்த பைனான்ஸியரின் பணம் வாங்கும் ஸ்டைலே வேறு மாதிரியாக இருக்குமாம். தயாரிப்பாளர்கள் கேட்டதும் பணம் ரெடியாக இருக்கும்மாம். கொடுத்த நாளில் இருந்தே தவணை ஆரம்பித்துவிடுமாம். சொன்ன தேதியில் பணம் கொடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் வீட்டிற்கு சென்று, அங்கே அரைநிர்வாணமாக்கி உட்காரவைத்து அரைமணி நேரத்திற்கு மேலாக கேவலமாக திட்டுவாராம்.
தயாரிப்பாளர் மரணத்திற்கு காரணம்
கூனிக்குறுகிப்போன அந்த தயாரிப்பாளர்கள் எப்படியாவது பணத்தை கொடுத்தால் போதும் என்று கையில் இருப்பது, வாங்கிய சொத்துகள் என எல்லாவற்றையும் விற்று அடுத்த நாளே அவரிடம் கொடுத்துவிடுவார்களாம். மணியான இயக்குநரின் அண்ணன் பணம் வாங்கிய போதும் பலமுறை கேட்டும் பணம் வராததால், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த அவரது மனைவியை தூக்கி வைத்து மிரட்டி இருக்கிறார்கள் பைனான்ஸியரின் ஆட்கள். பணம் வரும் என்று காத்திருந்த பைனான்ஸியருக்கு, தயாரிப்பாளர் தூக்கு போட்டு இறந்த செய்தி தான் வந்திருக்கிறது.
20 கோடிக்கும் அதிகமான கடன்
அப்போதும் இதுபோல சைலண்டாக இருந்தவர் கொஞ்ச நாட்களில் ஆக்டிவாகி விட்டார் என்று தெரிவிக்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். ஏற்கனவே கடன் வாங்கி வைத்து இருந்தாலும், இப்போது இந்த தயாரிப்பாளர் இறந்ததற்கும் இசை வாத்தியம் தொடர்பான படத்தை அவர்கள் நிறுவனம் தயாரித்ததும் தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதில் தான் 20 கோடிக்கும் அதிகமாக கடனில் விழுந்தது அந்த நிறுவனம்.
சினிமா மோகம்
மேலும், சிக்கிய ஒரு பைனான்ஸியர் மட்டும் தற்போதைய மரணத்திற்கு காரணம் இல்லை. சினிமாவில் கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பலரும் இதற்கு காரணம் என்று கைகாட்டுகிறார்கள் இதில் சம்பந்தப்பட்டவர்கள். எப்படியும் சம்பாதித்து விடலாம் என்கிற ஆசையில் சம்பளம் , கால்ஷீட், தயாரிப்பு செலவு என எல்லாவற்றிற்கும் அதிகமான தொகையை ஏற்றிவைத்திருப்பதே இதுபோன்ற மரணங்களுக்கு காரணம். இதை எல்லாம் முறைப்படுத்தாமல் ஒரு பைனான்ஸியரை மட்டும் தேடிப்பிடித்து விட்டால் எதுவும் சரியாகி விடாது என்கிறார்கள் விபரம் தெரிந்த புள்ளிகள்.