தீயை அணைக்க ஆகும் செலவுகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தான் தரவேண்டும் - ஜெயக்குமார் அதிரடி!
சென்னை சில்க்ஸில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஆகும் செலவுகளை கடை நிர்வாகத்தினர் தான் தரவேண்டும் என அமைச்சர் ஜெக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை சில்க்ஸில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஆகும் செலவுகளை கடை நிர்வாகத்தினர் தான் தரவேண்டும் என அமைச்சர் ஜெக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தீயை அணைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸின் குமரன் தங்கமாளிகையில் ஏற்பட்ட தீ விபத்தை 12 மணி நேரமாகியும் அணைக்க முடியவில்லை. 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் தீயை அணைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
விதியை மீறியிருந்தால்..
விபத்திற்கு பிறகுதான் கட்டடம் விதியை மீறிக் கட்டடப்பட்டதா என ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் கட்டடம் விதியை மீறி கட்டப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நிச்சயம் இடிக்கப்படும்
தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடம் உறுதி தன்மையை இழந்திருந்தால், நிச்சயம் இடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கட்டடம் கட்டியதில் விதிமீறல் இருந்தால்,உரிமையாளர் மற்றும் அனுமதி வழங்கிய சிஎம்டிஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
செலவை ஏற்க வேண்டும்
புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார். மேலும் தீயை அணைக்க ஆகும் செலவை கடை நிர்வாகத்தினர் தான் வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தற்போது கூறமுடியாது
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளன என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து தற்போது கூறமுடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.