சென்னை விருகம்பாக்கத்தில் சோகம்-தாயின் உடலை அடக்கம் செய்ய பைக்கில் கொண்டு சென்ற மகன்!
தாயின் சடலத்தை அடக்கம் செய்ய பைக்கில் மகன் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னையில், வறுமையின் காரணமாக இறந்த தாயின் உடலை பைக்கில் வைத்து மின்மயானத்துக்கு மகன் தள்ளிச்சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம், வேம்புலிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், கண்ணன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு அருண்குமார், அஜித்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். கண்ணனின் அம்மா 85 வயதான புவனேஸ்வரியுடன் அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்துள்ளனர்.
புவனேஸ்வரியின் நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தினருக்கு பிடிக்காத காரணத்தினால், அவரை ஏளனமாக பேசியும், கேலி செய்தும் வந்துள்ளனர். அருண்குமார், கால்டாக்ஸி டிரைவராகவும், அஜித்குமார், விருகம்பாக்கத்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டியிலும் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அருண்குமார், ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அஜித்குமாரின் வருமானத்தில் குடும்பம் நடத்த மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும், வாடகை கூட சரிவர தர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இவர்களது வறுமையைகூட அக்கம்பக்கத்தினர் அவ்வப்போது கேலி செய்வார்களாம்.
இந்தச் சமயத்தில், புவனேஸ்வரி உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கேலி செய்யும் அக்கம்பக்கத்தினருக்கு தாய் இறந்ததை சொன்னால் அதையும் ஏளனம் செய்வார்கள் என்று நினைத்து, யாருக்கும் தெரியாமல் புவனேஸ்வரியை அடக்கம் செய்ய முடிவெடுத்தனர். இதனால் இரவு முழுவதும் கண்ணன் தன் தாயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தார்.
பின்னர் அதிகாலையில் புவனேஸ்வரியின் உடலை பைக்கில் உட்காரவைத்து, மேட்டுக்குப்பம் பகுதியிலுள்ள மின்மயானத்துக்கு கொண்டு அஜித்குமார் தள்ளிசென்றார். புவனேஸ்வரி உடல் கீழே விழுந்துவிடாமல் கண்ணனும், சாந்தியும் பிடித்துக் கொண்டனர்.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து விருகம்பாக்கம் போலீஸில் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார், கண்ணனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, வறுமை காரணமாக தங்களிடம் பணம் இல்லாததால், பைக்கில் உடலை மின்மயானத்துக்குக் செல்கிறோம் என்றார்.
இதையடுத்து, புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றிய, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, கண்ணன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.