சொத்துக்காக தந்தையை கடத்தி தாக்கிய மகன்.. தப்பி வந்து போலீஸில் பரபர புகார்
சொத்துக்காக தன்னை கடத்தி சென்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க தந்தை புகாரளித்துள்ளார்.
ஈரோடு: சொத்துக்காக கடத்தி சென்று ஆவணங்களில் கையெழுத்து பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பக்கீர் முகம்மது. ஊதுபத்தி வியாபாரியான இவரது மனைவி நாகூர் அம்மாள். இவர்களுக்கு சாகுல்அமீது , அப்பாஸ் என இரு மகன்கள் உள்ளனர். பக்கீர் முகம்மதுவுக்கும் அவரது மூத்த மகன் சாகுல் அமீதுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி கருங்கல்பாளையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை அவரது மகன் காரில் கடத்தி சென்று தாக்கியுள்ளார். மேலும் நண்பர்கள் உதவியுடன் சொத்து ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மகனிடமிருந்து தப்பி வந்த பக்கீர்அகமது ஈரோடு எஸ்பி சக்திகணேசை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தன்னை கடத்தி சென்று தாக்கி ஆவணங்களில் கையெழுத்து பெற்ற மகன் சாகுல் அமீது மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். சொத்துக்காக தந்தையை கடத்திய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.