சென்னை எண்ணூரில் கூலி தொழிலாளியை அடித்து கொன்ற மகன்: போலீசார் அதிரடி கைது
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை பெற்ற மகன் அடித்து கொன்றுள்ளார்.
சென்னை: குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை எண்ணூர், வஉசி நகரை சேர்ந்தவர் செல்வம் 46. தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால், செல்வம் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் வினோத் 25, கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 28-ஆம் தேதி, செல்வம் மயங்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன் வினோத்குமார், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்ததின் பேரில், சென்னை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு செல்வத்தை அழைத்து சென்றனர். ஆனால் செல்வம் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கணவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தவமணி எண்ணூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டதாக வந்ததையடுத்து, போலீசார் செல்வத்தின் மகன் மீது சந்தேகித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குடி போதையில் தந்தையை வினோத்குமார் அடித்ததும், தகராறின்போது தள்ளி விடப்பட்டதில் செல்வம் உயிரிழந்தும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, எண்ணூர் போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைந்தனர்.