தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. தமிழக துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், கடலூர், பாம்பன், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கேரள பகுதிகளில் நேற்று வீசத் தொடங்கிய தென்மேற்கு பருவகாற்று தென் தமிழகத்தில் வீச தொடங்கியதால் தென் தமிழக பகுதிகளில் பருவ மழை துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல மத்திய கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூரை தொடர்ந்து பாம்பனிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோல, நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றான் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளதால், தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.