சட்டவிரோதமாக டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளை பயன்படுத்த கடும் எதிர்ப்பு!
உள்ளாட்சி அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளை கொண்டு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை சட்டவிரோதமாக திறக்க மாநில அரசு முயற்சிப்பதாக மாற்றம் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளை கொண்டு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை சட்டவிரோதமாக திறக்க மாநில அரசு முயற்சிப்பதாக மாற்றம் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
உள்ளாட்சி பிரதிகளின் பதவிகாலம் முடிவடைந்து தேர்தல் நடத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அரசு சார்பில் உள்ளாட்சி பணிகளை கவனித்து கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள்பட்ட மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன்பேரில் கடந்த 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிகள் எடுத்துக் கொண்டு அதற்கான தீர்மானத்தை 25-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற சிறப்பு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றம் இந்தியா சார்பில் அதன் இயக்குநர் பாடம் நாராயணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர சிங்குக்கும், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், உள்ளாட்சி தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மேலும் கொள்கை முடிவுகளை எடுக்க சிறப்பு அதிகாரிகளுக்கு அரசமைப்பு சட்டத்தின் படி எந்த அதிகாரமும் இல்லை.
அவ்வாறு இருக்கும் நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிகள் எடுத்துக் கொள்வதற்கான தீர்மானத்தை கொண்டு வர சிறப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் மூலம் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை கொண்டு வருவதற்கான முயற்சியில் மாநில அரசு உள்ளது. மேலும் இது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் செயலாகும். எனவே தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.