உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மதவெறி அரசியலை தடுத்திடுக - திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் இறப்பு தேசிய அவமானம் என்றும், உயர்கல்வி நிறுவனங்கள் சாதி மத வெறி மற்றும் பாசிச அரசியலின் கூடாரமாவதை தடுக்க வேண்டும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சிப் பட்டபடிப்பு மாணவன் ரோகித் வெமுலாவின் சாவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் எற்படுத்தியுள்ளது. ரோகித் வெமுலாவின் சாவுக்கு காரணமாக கருதபடுகிற பல்கலைகழகத்தின் துணைவேந்தர் முனைவர். அப்பாராவ், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென போராடி வருகிற மாணவர்களை அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆதரித்து ஆறுதலைத் தெரிவித்து வருகிறார்கள். அத்துடன், நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஆனால், பிரச்சனையைத் தீர்க்கவேண்டிய மத்திய அமைச்சர்கள், அம்பேத்கர் மாணவர் சங்கத்தை குறைகூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல பாதிக்கப்பட்ட மாணவர்களையும், அவர்களது போராட்டங்களையும் இழித்தும் பழித்தும் கருத்து கூறிவருகின்றனர்.
குறிப்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ‘‘பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழுவுக்கு தலித் பேராசிரியர் தான் தலைமை வகித்தார். அந்த குழுதான் மாணவர்களை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது" என்று கூறியுள்ளார். அவரது பேச்சுக்கு ஐதராபாத் மத்திய பல்கலைகழக தலித் பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழுவுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் விபின்ஸ்ரீவஸ்தாவாதான் தலைவர் என்றும் நிர்வாக குழுவில் எந்த தலித் உறுப்பினர்களும் இடம் பெறவில்லை என்றும் அமைச்சர் ஸ்மிருதி இரானி பொய்யான தகவலை பரப்பி, அவரையும், அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவையும் காப்பாற்றிக் கொள்ளவே இப்படி கூறியுள்ளதாக, பல்கலைகழக தலித் பேராசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, அமைச்சரின் கருத்தை திரும்பபெற வலியுறுத்தி 14 தலித் பேராசிரியர்கள் தாங்கள் வகித்த நிர்வாக பதவிகளை விட்டு விலகி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தலைவர்களும் அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றனர். பிரதமர் மோடி அவர்கள், இப்பிரச்சனைக்கு காரணமானவர்களைக் கண்டிக்காமலும், தண்டிக்காமலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளில் வழக்கம் போல் மௌனம் சாதித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஆகவே மத்திய அரசு இப்பிரச்சனையில் மெத்தனம் காட்டாமல், பல்கலைகழகத்தின் துணைவேந்தர் முனைவர். அப்பாராவ், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரைப் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், போராடும் மாணவர்களின் உதவித்தொகை, மாணவன் ரோகித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
அத்துடன், இந்திய தேசத்திற்கே தலைகுனிவையும் அவமானத்தையும் உருவாக்கியுள்ள ரோகித் வெமுலாவின் சாவு குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் நிலவுகிற சாதியப் பாகுபாடுகளைத் தடுக்கவும், மக்களைப் பிளவுப்படுத்தும் சாதிமதவெறி மற்றும் பாசிச அரசியலின் கூடாரமாக கல்வி நிறுவனங்கள் உருவாவதைத் தடுக்கவும், உயர்கல்வி நிறுவனங்களில் தலித் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நிகர சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டுமென்கிற தோரட் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.