சலாம் கலாம்.. கை தட்டி பாராட்டிய கைப்.. எதற்காக, ஏன்...?
ராமேஸ்வரம் கோயிலில் சிலைகளிடையே அப்துல்கலாம் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: நாட்டை பற்றியும், எதிர்காலம் குறித்தும் இளைஞர்களுக்கு ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், வழங்கியவர் டாக்டர் அப்துல்கலாம்.
யார்மீதும் இல்லாத அபரிமித நம்பிக்கையை இளைஞர்கள் மீது வைத்து, அவர்களிடம் தனது தேசம் குறித்த கனவினையும் நிறைவேற்ற சொல்லிட்டு சென்றனர்.
பொன்மொழிகளே ஊன்றுகோல்
இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவரது பொன்மொழிகளே ஊன்றுகோலாக அவர்களை இன்றுவரைதாங்கி பிடித்து வருகிறது.. விஞ்ஞானி, ஜனாதிபதியாக இருந்தும், சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசபூர்வமாகவும் மாணவர்களோடும் குழந்தைகளோடும் உரையாடும் அவரது உயர்ந்த இன்றுவரை பாராட்டுக்குரியதும், மகிழ்ச்சிக்குரியதும், வியப்புக்குரியதும் ஆகும். நேருவுக்குப் பிறகு அதிகம் குழந்தைகள் ரசித்த மாபெரும் தலைவன்.. அறிஞன்.. கலாம்!
மண்டபத்தில் சிலை
அவர் இறந்து வருடங்கள் கடந்தாலும், அவரை பற்றியோ அல்லது அவரை பற்றின செய்திகளையோ, நாம் பேசாமலும், நினைக்காமலும் நாட்களை கடத்த முடியாதுதான். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தற்போது மிக விரைவாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால், ராமேஸ்வரத்தில் உள்ள கோயில் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் சிலைதான். கோபுரத்தில் சிலைகளுக்கிடையே கலாம் சிலையையும் வைத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உண்மையான ஹீரோ
இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது இதன் கூடுதல் சிறப்பு. முகமது கைப், "இதனைப் பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக உள்ளது. உண்மையான ஹீரோ. அனைவருக்கும் உத்வேகத்தை அளிப்பவர்" என்ற கருத்தினையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்காக பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன. அதற்கு பதிலளித்த பலரும், ''இதுதான் இந்தியா, தமிழராக இருப்பதற்கு பெருமை அடைகிறோம், தமிழகத்தில் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மை உள்ளது'' எனப் பலரும் பதிவிட்டுள்ளனர்.
கலாம் போல ஆகுமா?
கோபுர உச்சியையும் தாண்டி கலாமின் புகழ் நீண்டுகொண்டே போகும். இன்னும் பல காலம் கடந்தாலும், கல்லாக, சிலையாக, ஓவியமாக, புத்தகமாக, கலாம் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ குடியரசு தலைவர் வந்தாலும் அது கலாம் போல ஆகுமா என்ன?