சார்.. அந்தப் பாலத்து மேல மட்டும் வேணாம்.. ப்ளீஸ்!
Recommended Video
சென்னை: விர்ரென்று சீறிப் பாயும் வாகனங்கள்.. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை. செங்கல்பட்டைத் தாண்டி ஆரம்பிக்கிறது நமது கதை.
பழையனூர் சாலை.. பச்சை நிற பெயர்ப் பலகை. பார்க்க பசுமையாக இருந்தாலும் இதற்குள் ஒரு பயங்கரமும் பதுங்கியிருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அட என்னய்யா ரொம்பத்தான் பீதி கிளப்புறீங்களே.. போய்த்தான் பார்ப்போமே என்று களம் இறங்கினோம். நேரில் போய் நெருங்கிப் பார்த்தால் நிறைய கதைகள் கிடைத்தது.
பழையனூர் செல்லும் சாலை
செங்கல்பட்டைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இடது புறமாக விலகி இறங்குகிறது பழையனூர் செல்லும் சாலை. நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறமாக செல்லும் இந்த ஊரின் முன் புறத்தில் 15 அடி கொண்ட கால்வாய் உள்ளது.
கால்வாயைக் கடக்க பாலம்
சாலையின் நடுவே அமைந்துள்ள இந்த கால்வாயை கடப்பதற்கு ஒரு பாலம் உள்ளது. கட்டி 50 வருடங்களாகிறது இந்த பாலம். ஸோ, பழைய பாலமாக, பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
பழைய பாலம்
இது நீர்வரத்துக் கால்வாய் பாலம். இப்பாலத்தை கடந்து தான் பழையனூர் மக்கள் செல்ல வேண்டும். ஆனால் இது இப்போது பாழடைந்து போய்க் கிடக்கிறது. கைப்பிடிச் சுவர் கூட இத்துப் போய் விட்டது. சரி மேட்டருக்கு வருவோம்.
கீழே விழுவது உறுதி
இந்தப் பாலம்தான் இந்தக் கதையின் நாயகன். அதாவது அமானுஷ்ய நாயகன். இந்தப் பாலத்தைக் கடந்து யார் சென்றாலும் நிச்சயம் விபத்து நேரிட்டு கீழே விழுவது உறுதியாம். இதுவரை இந்தப் பகுதியைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் நிலை தடுமாறி விழுந்து அடிபட்டுள்ளனராம்.
அமானுஷ்ய சக்தி
ஏன் எதற்கு என்று காரணமே கிடையாதாம். இந்தப் பாலத்தின் வழியாகப் போனால் நிச்சயம் அடி விழுவது உறுதி என்கிறார்கள். இங்கு "அமானுஷ்ய" சக்தி இருப்பதால்தான் இந்த மாதிரி நடப்பதாக ஊர் மக்கள் சொல்கிறார்கள். எனவே மாலை ஆகி விட்டால் இந்தப் பாலத்தில் செல்வது அடியோடு நின்று போகிறது.
இரவு வந்தால்
சூரிய வெளிச்சம் ஓய்ந்த பின்னர் இந்தப் பாலத்துப் பக்கமே யாரும் திரும்பிப் பார்ப்பதில்லையாம். 7 மணிக்கு மேல் பாலத்தின் வழியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். எந்த அவசர தேவையானாலும் 7 மணிக்கு மேல் இப்பாலத்தின் வழியே அப்பகுதி மக்கள் செல்லாமல் மாமண்டுர் வழியாக சுமார் 6 கிலோமீட்டர் வரை சுற்றித்தான் தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றனர்.
மக்களின் அச்சம்
ஊருக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையிலான தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் இந்த அமானுஷ்ய பயத்தால் கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் சுற்றி வருகின்றனராம். காத்து, கறுப்பு என்று கலந்து கட்டி பீதி கிளப்பும் குரூப் இருக்கும் வரை இந்தப் பாலத்தின் மாயாஜாலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.. தைரியத்தை கையில் எடுங்க மக்களே.. பாலத்தை புதுப்பித்துக் கட்டி ஜாம் ஜாமென்று அதைப் பயன்படுத்துங்கள்..!