ஈரோடு அருகே ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்
ஈரோடு அருகே ரேஷன் கடை திறக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியாயவிலை கடையினை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு பட்டகாரன்பாளையத்தில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பட்டகாரன்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் பெற நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தங்களுக்கு அருகிலேயே நியாயவிலை கடைக அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாயவிலை கடைக்காக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளை கடந்தும் இதுவரை நியாயவிலை கடை செயல்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த கிராமமக்கள் சம்பந்தப்பட்ட கடையினை முற்றுகையிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது அடுத்த கட்ட போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். நியாயவிலை கடைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் நூலகம் அமைக்க முயற்சிப்பதாகவும் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பட்டகாரன்பாளைய கிராமமக்கள் இன்று தங்களது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கும் அதிகாரிகள் செவிசாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.