டிபன் பாக்சை கிணற்றில் கழுவ சென்ற மாணவன் தவறி விழுந்து பலி.. தோகைமலையில் சோகம்
கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழந்தான்.
தோகைமலை: சாப்பிட்டபின் டிபன் பாக்சை கழுவ சென்றபோது, விவசாய கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தோகைமலை அருகே உள்ளே ஊராட்சி பகுதி தொண்டமாங்கிணம். இங்கு விட்டிகவுண்டனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்துவருபவர்கள் சுரேஷ்குமார்-சுசிலா தம்பதியினர். இவர்களுக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தினேஷ்குமார் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த பள்ளியில் தண்ணீர் வசதி கிடையாது. இதனால் அப்பள்ளி மாணவர்கள், தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் பள்ளி அருகிலுள்ள விவசாய கிணற்றிலுள்ள நீரைதான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மதிய உணவு இடைவேளியின்போது, நண்பர்களுடன் தினேஷ்குமார் சாப்பிட்டார். பின்னர் தன்னுடைய டிபன்பாக்சை கழுவலாம் என்று விவசாய கிணற்று பகுதிக்கு சென்றார். அங்கு படிக்கட்டில் உட்கார்ந்து டிபன்பாக்சை கழுவும்போது, அதன் மூடி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. மூடியை பிடிக்க முயன்ற மாணவன் படிக்கட்டிலிருந்து தவறி தண்ணீருக்குள் கவிழ்ந்து விழுந்தான்.
இதனை பார்த்த உடன் வந்த மாணவர்கள் அலறி கூப்பாடு போட்டனர். சத்தத்தை கேட்டு அப்பகுதியிலிருந்தவர்கள் ஓடிவந்து கிணற்றில் குதித்து மாணவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவன் அதற்குள் உயிரிழந்துவிட்டான். தகவலறிந்து வந்த தோகைமலை போலீசார், மாணவன் உடலை மீட்டதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசு பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததாலேயே மாணவர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால், ஆபத்தான விவசாய கிணற்றின் படிக்கட்டில் இறங்கி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலைமை இனி மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.