சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் பள்ளம்.. பொது மக்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மற்றும் ஆதம்பாக்கத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை எஸ்ஐஇடி சாலையில் சுமார் 4 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயில் பணியாளர்கள் சிமென்ட் கலவை மூலம் அந்த பள்ளத்தை நிரப்பி மூடினர்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது. மெட்ரோ ரயில் பணி காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் ஆதம்பாக்கத்தில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இங்குள்ள ஏரிக்கரை தெருவில் உள்ள சாலையில் 8 அடி பள்ளம் ஏற்பட்டு கீழே சென்றது. இதையடுத்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சரி செய்து வருகின்றனர். சென்னை சாலைகளில் அடிக்கடி திடீரென பள்ளம் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சம் நிலவுகிறது.