"சன்னின் ‘சம்மர்’ பிளான்"..... பாளையங்கோட்டையில் வெயில் வெளுத்தெடுக்கும் - வானிலை மையம் தகவல்
சென்னை: இந்தாண்டு கோடைக்காலத்தில் பாளையங்கோட்டையில் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பனிக்காலம் முடிந்து மெல்ல மெல்ல சூரியன் தனது உக்கிரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். அதிலும், குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக பாளையங்கோட்டையில் 90 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது.
நேற்று பதிவான வெப்ப நிலவரப்படி அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 94 டிகிரி பதிவாகி உள்ளது. திருச்சியில் 89 டிகிரி, சேலத்தில் 90 டிகிரி மற்றும் மதுரையில் 91 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 87 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 88 டிகிரியும் பதிவானது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ‘வட கிழக்கு பருவ மழை முடிந்து, தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கு மேல் பனிக்காலம் நீடித்து வந்தது. தற்போது பனி குறைந்து வருவதால் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகரிக்கும்' என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே காணப்படுவதால் போக போக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.