தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது - அனல் பறக்கும்
3 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. எதிர்கட்சியினர் அனலை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. காவிரி பிரச்னை, குரங்கணி தீ விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 15ம் தேதி கூடியது. அப்போது, தமிழக அரசு 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையை எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தன. பட்ஜெட் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபைக் கூட்டம் இன்று கூடியுள்ளது. பேரவை கூடியதும் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2018-2019ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கியது
தினமும் காலை 10 மணிக்கு கேள்வி நேரம் இருக்கும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பட்ஜெட் குறித்து பேசுவார்கள். பட்ஜெட் கூட்ட தொடரின் கடைசி நாளான மார்ச் 22ம் தேதி 2018-2019ம் ஆண்டின் முன்பண மானிய கோரிக்கைகள் பேரவை முன் வைக்கப்படுகிறது.
2017-2018-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பட்டு துணை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் இன்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 2018-2019ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் நடைபெறுகிறது. அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவார்கள். அதைத்தொடர்ந்து பட்ஜெட் பற்றிய விவாதத்துக்கு முதல்வர் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறையும், கடன் சுமையும் அதிகரித்தபடி உள்ளது. அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இந்த சூழ்நிலையிலும் இலவச திட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேச திட்டமிட்டுள்ளனர்.
காவிரி பிரச்னை, குரங்கணி தீ விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு எதிரான வன்முறை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குரங்கணி தீ விபத்து குறித்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.