டாக்சி டிரைவர் மணிகண்டன் மீது நெருப்பை வைத்து கொளுத்தி கொன்றது போலீஸ்.. பகீர் குற்றச்சாட்டு
சென்னை: ஓட்டுநர் மணிகண்டன் மீது தீ வைத்தது அவரைத் தாக்கிய காவலர்களில் ஒருவர் தான் என கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கத் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, தரமணியில் வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டனை சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கண்டித்து, காவல்துறையினர் தாக்கினர். மனம் நொந்த அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மணிகண்டன் உயிரிழந்தார்.
இதனிடையே, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று, மணிகண்டன் குடும்பத்தாருக்கு, மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.
பின்னர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: இது ஒன்னும் இல்லாத பிரச்சினை. சீட் பெல்ட் அணிந்திருக்காவிட்டால், போலீசார் அவரை, வார்னிங் செய்து அனுப்பலாம் அல்லது, அபராதம் விதித்திருக்கலாம். ஆனால் தனது ஜாதி பெயரை சொல்லி திட்டியதால் மணிகண்டன் தீக்குளித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி, எந்த ஜாதி, எந்த மதமாக இருந்தாலும் சமமாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மணிகண்டனை உள்ளே கூப்பிட்டுச் சென்று அடித்து அனுப்பியுள்ளார். மணிகண்டன் பெட்ரோலை ஊற்றியதும், 'நெருப்பை வைங்கடா' என கூறி ஒரு போலீஸ்காரர்தான் அவர் மீது தீ வைத்துள்ளார். அவர் யார் என தெரியவில்லை. இது திட்டமிட்ட கொலை. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.