வெள்ளச் சேதங்கள் குறித்த அறிக்கை கட்சி மேலிடத்திடம் அளிப்போம் - நிர்மலா சீத்தாராமன்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்கள் குறித்த அறிக்கையை கட்சி மேலிடத்தில் கொடுப்போம் என்று சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக வெள்ளச் சேதங்களை பார்வையிட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவால் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு இன்று சென்னை வந்தது.
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "தமிழகத்தில் இன்றும், நாளையும் ஆய்வுகளை மேற்கொண்டு கட்சி மேலிடத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இன்று காலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பண்ருட்டி பகுதிகளில் தனது ஆய்வை தொடங்கியுள்ளார். நானும், தமிழிசை சவுந்தரராஜனும் இன்று காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறோம். நாளை திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.