60 வருடம் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 85 வயது முதியவர்.. அதிர்ச்சியில் பரிதாப மரணம்!!
கும்பகோணத்தில், 60 வருடமாக வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ய சொன்னதால், அந்த வீட்டில் வாழ்த்த முதியவர் தனசேகர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
Recommended Video
கும்பகோணம்: கும்பகோணத்தில், 60 வருடமாக வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ய சொன்னதால், அந்த வீட்டில் வாழ்த்த முதியவர் தனசேகர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் அருகே கும்பேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் 80 ஆண்டுகளுக்கு முன் சின்னம்மாள் வாடகைக்கு குடி ஏறி இருக்கிறார். அந்த வீட்டை ராமதாஸ் என்பவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன் உள் வாடகைக்கு விட்டுள்ளார்.
அதன்பின் சின்னம்மாள், ராமதாஸ் ஆகியோர் இறந்து விட தற்போது 85 வயது நிரம்பிய ராமதாஸின் மகன் தனசேகர் தன் குடும்பத்தினருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார். 60 ஆண்டுகளாக தனசேகர் கோவிலுக்கு வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
வாடகை பாக்கியாக 80 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. 2015ம் ஆண்டு இந்த வீட்டினை காலி செய்யும் படி கோவில் நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அப்போதும் வாடகை தர முன்வராமலும், வீட்டை காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார். கோவில் நிர்வாகம் கடந்த வாரம் இறுதி எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் வந்த குழுவினர் தனசேகர் வீட்டில் இருந்த பொருட்களை வெளியேற்றினர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த தனசேகர் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்தநிலையில் பாதுகாப்பு காரணமாக டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த தனசேகர் தான் குடியிருந்த வீட்டினை கோவிலுக்கு தெரியாமல் 2 நபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய்க்கு உள் வாடகைக்கு விட்டுள்ள விபரம் இன்று கோவில் நிர்வாகத்திற்கு தெரிய வந்ததால் இன்று இந்த வீட்டை கையகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனசேகர் உயிரிழந்த சம்பவம் அங்கு எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.