பரிதாப நிலையில் திருச்செந்தூர் ரோடு.. தூங்கி வழியும் அறநிலையத்துறை அதிகாரிகள்!
திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் சாலை படுபயங்கரமாக சேதமடைந்து காணப்படுவதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.
திருச்செந்தூர்: கோயிலுக்கு செல்லும் சாலை படுபயங்கரமாக சேதமடைந்து காணப்படுவதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக கருதப்படுவது திருச்செந்தூர். இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத்தை பார்க்க வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. மேலும் கந்த சஷ்டி, தைபூசம் போன்ற முக்கிய நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயிலில் அடிப்படை வசதிகள் என்பது அறவே இல்லை.
வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, கீழ ரதவீதி, மேலரத வீதி போன்றவற்றில் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இது போல் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் வலியுறுத்தியதால் பேவர் பிளாக் கல் அமைக்க ரூ.40 லட்சம் ஓதுக்கப்பட்டது.
இந்த பணி தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மக்களின் சுகாதார வசதிக்காக பாதாள சாக்கடை திட்டம் 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டும் பணியை முடித்தவர்கள் பின்னர் அப்படியே பணியை கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இடிந்த விழுந்த கோயில் பிரகாரத்தை இன்னும் முழுமையாக இடித்து முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி பல்வேறு புகார்களால் திருச்செந்தூர் முருக பக்தர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் அறநிலையதுறை அதிகாரிகளோ வழக்கம் தூங்கி கொண்டிருப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.