புதுவை, புதுகையின் அசத்தல் கட்டட டிசைன்.. வெள்ளத்திலும் கம்பீரமாய் நின்ற பிரெஞ்சு குடியிருப்பு!
புதுச்சேரி: விடாது கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்திலும் புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் அமைத்த குடியிருப்புகள் மட்டும் கம்பீரமாக நிலைத்து நின்ற சம்பவம் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா முழுவதும் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் புதுவையை மட்டும் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டு வந்தனர்.
அவர்கள் கடற்கரையையொட்டி குடியிருப்புகளை அமைத்தனர். இதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு அழகிய நகரம் உருவாக்கப்பட்டது.
புல்வார் நகரம்:
இந்த நகரம் புல்வார் என்று அழைக்கப்படுகிறது. புதுவை கவர்னர் மாளிகை, சட்டசபை, அரவிந்தர் ஆசிரமம், நேரு வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி, குபேர் சாலை ஆகியவை புல்வார் பகுதியில் அமைந்துள்ளன.
10 ஆயிரம் வீடுகள்:
இவற்றில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் இருக்கின்றன. அவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. அனைத்து தெருக்களையும் நூல் பிடித்தார்போல நேர் கோட்டில் பிரெஞ்சுக்காரர்கள் அமைத்து இருந்தனர்.சமீபத்தில் பெய்த பெரும் மழையால் புதுவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், பிரெஞ்சுக்காரர்கள் அமைத்த புல்வார் பகுதியில் மட்டும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஹெச் வடிவக் கால்வாய்கள்:
மிகப் பலத்த மழை பெய்த போதும் தெருவில் தேங்கிய தண்ணீர் சில நிமிடங்களில் வெளியேறி விட்டது. இதற்கு பிரெஞ்சுக்காரர்கள் வடிகால் வசதியோடு நேர்த்தியாக நகரை அமைத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. புல்வார் பகுதியில் ஆங்கில எழுத்தான ஹெச் வடிவத்தில் 3 கால்வாய்கள் நகரில் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து தெருக்களிலும் இருந்து வரும் மழைநீர் இந்த வாய்க்காலில் சேர்ந்து நேரடியாக கடலுக்கு செல்லும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மற்ற இடங்களில் சேதம் அதிகம்:
இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் அந்த கால்வாய் வழியாக உடனடியாக கடலுக்கு சென்றுவிட்டது. அதே நேரத்தில் சுதந்திரத்துக்கு பின்பு புதுவையில் அமைக்கப்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதியிலும் மழை நீர் புகுந்து அதிகமான சேதத்தை ஏற்படுத்தியது. சில இடங்களில் இன்னும் கூட மழைநீர் தேங்கியபடியே உள்ளது.
வியப்பில் ஆழ்த்திய கட்டிட அமைப்பு:
புதுவையின் பக்கத்து நகரமான கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டது. வடபகுதி நகரமான சென்னை மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. அதே அளவுக்குதான் புதுவையிலும் மழை பெய்தது. ஆனாலும், பிரெஞ்சுக்காரர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த நகரம் மட்டும் எந்த பாதிப்பையும் சந்திக்காதது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தண்ணீர் தேங்காத புதுகை:
தமிழகத்தில் அதே போன்று புதுக்கோட்டையிலும் தண்ணீர் தேங்கி நிற்காது. 23க்கும் மேற்பட்ட குளங்களைக் கொண்ட இந்த ஊரின் தெருக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக அமைக்கப்பட்டுள்ளன. அதனால் எந்த் தெரு வழியாகவும் மற்றொரு தெருவினை அடைந்து விடலாம். அகலமான சாலைகள் நீரைத் தேங்க விடாமல் வெளியேற்றும் வழி கொண்டவை. புதுவையும், புதுகையும் மட்டுமே இந்த அமைப்பில் அமைந்திருக்கின்றன என்பது சிறப்பு.