வெயில் தாக்கம்: பாபநாசம் அணையின் நீர் மட்டம் சரிந்ததால் மூன்று மாவட்ட மக்கள் பரிதவிப்பு
அணைகளின் நீர்மட்டம் சரிந்துவிட்டதால் 3 மாவட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பொது மக்கள் குடிநீர் கிடைக்குமா என்ற பயத்தில் உள்ளனர்.
பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி தண்ணீர் பாபநாசம் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப விவசாயம் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் நிலவிய கடும் வறட்சி மற்றும் மழை இல்லாததால் பாபநாசம் அணையில் தேக்கி வைக்கும் அளவுக்கு போதிய தண்ணீர் இல்லை.
இதனால் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பொய்து போனது. இருப்பினும் அதன் பிறகு பெய்த மழையால் பாசன பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன் பிறகு ஓகி புயல், வடகிழக்கு பருவ மழையால் தண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த தண்ணீரை தேக்கி வைக்காமல் தேவையில்லாமல் திறந்து விட்டதால் தற்போது அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது.
இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் தற்போது 22 அடியாக உள்ளது. இதில் 10 அடிக்கு சேரும், சகதியும் தான் இருக்கும். இந்த காரணத்தால் முதன் முறையாக அம்பை, விகேபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுபாடு தலை தூக்கியுள்ளதாக பொது மக்கள் பயத்துடன் கூறி வருகின்றனர்.
கோடை மழை பெய்தால் மட்டுமே ஓரளவுக்கு குடிநீர் பஞ்சத்தை தீர்க்க முடியும் என பொது பணி துறையினர் கலக்கத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மணிமுத்தாறு அணையில் ஆறுதல் அளிக்கும் வகையில் 81 அடி தண்ணீர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அணை தண்ணீர் எத்தனைக்கு நாளுக்கு தாக்கு பிடிக்கும் என தெரியவில்லை. தற்போது செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதியில் மாலை வேளையில் கோடை மழை மட்டுமே அவ்வப்போது பெய்து ஆறுதல் அளித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.