"கோர்ட்டே சொல்லிருச்சு கள்ளக்காதல் தப்பில்லையாம்".. அதிர்ந்த மனைவி.. தூக்கில் தொங்கினார்!
கள்ளக்காதல் விவகாரம் காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: "சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு கள்ள காதல் தப்பில்லைன்னுட்டு.. உன்னால என்னை என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ" என்று சொன்ன கணவனின் பதிலால் இடிந்து போன மனைவி தூக்கிலே தொங்கிவிட்டார்.
சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஜான்பால் பிராங்க்ளின். இவரது மனைவி புஷ்பலதா, ஜான்பால் தான் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் பூங்காவில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
[ மக்களுக்கு இருக்குற பிரச்சினை போதாதா.. இதுவேறையா.. எஸ்பிஐ வங்கியின் புது அறிவிப்பை பாருங்க! ]
கள்ள தொடர்பு
இது ஒரு லவ் மேரேஜ்தான். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனாலும் ரெண்டு பேருக்கும் ஓயாமல் சண்டை இருந்துள்ளது. அதற்கு காரணம் ஜான்பால் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததுதான். பூங்காவில் வேலை பார்த்த ஒரு பெண்ணிடம்தான் கள்ள உறவு நீடித்து வந்துள்ளது.
ஜான்பால் பிடிவாதம்
இந்த விஷயம் புஷ்பாவுக்கு தெரிய வர தினம் தினம் குடும்பத்துக்குள் சண்டைதான்! "உன்னை நான் ரொம்ப நம்பினேனே, எனக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?" என்று புஷ்பா கணவனிடம் எவ்வளவோ அழுது பார்த்தார்.. சொல்லி பார்த்தார்.. கெஞ்சி பார்த்தார்... ஆனால் ஜான்பால் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்கவேயில்லை.
ஃபேனில் தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினமும் இதே பிரச்சனை வெடித்து தகராறு ஆரம்பமானது. அப்போது புஷ்பா, "இப்படி எனக்கு துரோகம் செய்தால் நான் போலீசுக்கு போய்விடுவேன்" என்று கணவனிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ஜான்பாலோ, "சுப்ரீம் கோர்ட்டே கள்ளக்காதல் தப்பு இல்லைன்னு சொல்லிடுச்சு. போய் வேலைய பாரு" என்று பதிலளித்துள்ளார். இதனால் மனம் நொந்து, இடிந்து போன புஷ்பா, தன் வீட்டிலேயே உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உருக்கமான கடிதம்
இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பெண் புஷ்பலதா எழுதிய கடிதத்தை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைப்பற்றினர். அதில், "தனது குழந்தையை கணவன் கள்ளக்காதலியிடமே அடிக்கடி தூக்கிக் கொண்டு போய் கொடுத்து விடுவதாகவும், அது தான் கணவனுக்கு மகிழ்ச்சி என்றால், தான் இறந்த பிறகாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்" என்றும் புஷ்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மனித குல நீதி
விசாரணை ஒரு பக்கம் இருக்கட்டும்!! தகாத உறவும் சரியே என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலையை மட்டும் இல்லாமல் உயிர்களையும் காவு வாங்க ஆரம்பித்திருக்கிறது. "ஆண், பெண் இருவரின் சம்மதத்துடன் நடந்தால் தகாத உறவு தப்பில்லை" என்கிறது சட்டம். "ஒருவனுக்கு ஒருத்திதான்" என்கிறது சமுதாயம். இதில் எதை நம்புவது? எதை பின்பற்றுவது? எதை பாதுகாப்பது? எங்கு சென்று நாம் நீதி கேட்பது? விளங்கவே இல்லை இந்த மனித குல நீதி!