குளிக்கப் போன இடத்தில் புளிய மரத்தில் கார் மோதி இளைஞர் பலி.. குற்றாலத்தில் பரபரப்பு
கார் புளிய மரத்தின்மீது மோதிய காரணத்தினால் இளைஞர் உயிரிழந்தார்.
குற்றாலம்: நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் மரத்தின் மீது கார் மோதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பலியானார். மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரமாக பெய்து வருவதை தொடர்ந்து குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாவட்டம்ஸ வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
அதேபோல தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த அருணாசலம் மகன் சக்தி (31)என்பவர் தனது குடும்பத்துடன் காரில் குற்றாலத்திற்கு வந்துள்ளார். ஐந்தருவி, புலியருவி, மெயின் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்து விட்டு பின்பு பழைய குற்றால அருவிக்கு குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டில் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல்துறையினர் விரைந்து வந்து பலியான சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.