திரையரங்கு கட்டணம்: தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்து தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் "தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது சென்னையில் ரூ.120, வெளிமாவட்டங்களில் ரூ.50-ம் அதிகப்பட்ச கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பது விதி என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயிப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
கேளிக்கை வரி விதிக்கப்படும் திரைப்படங்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது? மேலும் மனுதாரரின் புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ற கேள்விகளுக்கான பதிலை 2 வாரங்களுக்குள் அளிக்கும் படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வருகின்ற 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருக்கின்றனர்.
தியேட்டர் கட்டண விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த விவரங்கள் வருகின்ற 19 ம் தேதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.