பெரிய நடிகர்களின் படம் வந்தாலும் தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: கடம்பூர் ராஜு வார்னிங்!
எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் வெளிவந்தாலும் தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை: எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் வெளிவந்தாலும் தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டியுடன் 10 சதவீதம் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய படங்கள் எதையும் இரண்டு வாரமாக வெளியிடமால் திரைத்துறையினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி ஆகியோருடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2 சதவீதம் குறைப்பு
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர்கள் சந்தித்தனர். இதையடுத்து கேளிக்கை வரியை 2 சதவீதம் குறைத்து 8 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது.
அதிகமாக வசூலிக்கக்கூடாது
நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் வெளிவந்தாலும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இனி ஒரே கட்டணம் தான்
22 ஆண்டுகளாக முறைப்படுத்தாமல் இருந்த தியேட்டர்கள் கட்டணம் தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விழா நாட்களில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் இனி ஒரே மாதிரியான கட்டணம் தான் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பள விஷயத்தில் தலையிடாது
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நடிகர்களின் சம்பள விஷயத்தில் தமிழக அரசு தலையிடாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தியேட்டர்களில் கட்டண உயர்வை தடுக்க குழு அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.