திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தின் உடல் மதுரை மின் மயானத்தில் தகனம்
உடல் நலக்குறைவால் மரணமடைந்த அனல் பறக்கும் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்திற்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை: உடல் நலக்குறைவால் மரணமடைந்த அனல் பறக்கும் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்திற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் மதுரை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மதுரை: திமுகவின் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்,78. இவர் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
வெள்ளிக்கிழமையன்று 9 மணியளவில் ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடல் நேதாஜி தெருவிலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய பின்னர் தீப்பொறி ஆறுமுகத்தின் உடல், கீரைத்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தீப்பொறிக்காக கூடிய கூட்டம்
திமுகவின் பிரசார பீரங்கியாக வலம்வந்த ஆறுமுகம், பேரறிஞர் அண்ணாவிடம் தீப்பொறி என்ற பட்டம் வாங்கியவர். தீப்பொறி ஆறுமுகம் 1970களில் தொடங்கி 2001 வரை திமுகவின் முன்னணிப் பேச்சாளராக மேடைகளில் முழங்கியவர். அனல் பறக்கும் பேச்சால், கேட்கும் அனைவரையும் கட்டிப்போட்ட தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சில் பரபரப்பை எற்படுத்தக்கூடிய செய்திகள் மிகுந்திருக்கும். திமுகவை அச்சுறுத்த முற்பட்ட மிசா காலங்களில் மிசா கொடுமைகளை எதிர்கொண்டு தாங்கியவர்.
தீப்பொறி பேசுகிறார் என்ற போஸ்டருக்காகவே கூடிய கூட்டம் உள்ளது.
அதிமுகவில் தீப்பொறி
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை அதிகம் விமர்சித்து பேசினார். 2001இல் திமுக தலைமை மீது ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் தலைமைக்கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர், 2010ஆம் ஆண்டு அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று குற்றம்சாட்டி மு.க.அழகிரி முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்து, திமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளராக தொடர்ந்தார்.
ஸ்டாலின் விசாரணை
வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல், மேடைகளில் பேசி கட்சிப் பணியாற்றி வந்த தீப்பொறி ஆறுமுகம், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தீப்பொறி ஆறுமுகத்தை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து பாசத்தோடு விசாரித்ததோடு, மருத்துவ உதவியாக நிதி உதவியும் செய்தார்.
உடல்நலக்குறைவால் மரணம்
இந்நிலையில், நேற்று இரவு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரது இறுதி மூச்சு அடங்கியது. 78 வயது நிரம்பிய தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவுச் செய்தி அறிந்து, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள இல்லத்துக்கு வந்த ஏராளமான திமுக முன்னோடிகளும் தொண்டர்களும் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தீப்பொறி ஆறுமுகத்துக்கு சங்கரவடிவு என்ற மனைவியும் பாலசுப்பிரமணியன், முருகேசன் என்ற இரு மகன்களும் ரத்தினம், முத்துச்செல்வி, பழனியம்மாள் என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.
உடல் தகனம்
தீப்பொறி ஆறுமுகத்தின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று மாலை நடைபெற்றது. திமுகவினர் அஞ்சலி செலுத்திய பின்னர் தீப்பொறி ஆறுமுகத்தின் உடல், கீரைத்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திமுகவின் முன்னோடிகளுள் ஒருவரான இவர் தனது இறுதி மூச்சு அடங்கும்வரை திமுக மீது மிகுந்த பற்றுதலோடு இருந்தவர். அனல் பறக்கும் பேச்சால் திமுகவினரை கவர்ந்த தீப்பொறி இன்று அணைந்து விட்டது.