எதிர்க்கட்சிகளை தெறிக்கவிட்ட தீப்பொறி ஆறுமுகம் நிலை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
சென்னை: தீப்பொறி ஆறுமுகம்.. கடந்த தலைமுறையினருக்கு இந்த பெயர் எம்ஜிஆர், கருணாநிதிக்கு, ஜெயலலிதா போன்றோருக்கு இணையாக பரிட்சையம். திமுக சார்பாக உதிர்த்த இவரது பொறி பறக்கும் பேச்சால்தான் இந்த அடைமொழி அவருக்கு கிடைத்தது.
பேச்சால் எதையும் சாதிக்க முடியும், தீயினால் சுட்ட புண்ணைவிட நாவினால் சுட்ட வடு அதிக வலி தரும் என்பதற்கெல்லாம் வாழும் உதாரணம்தான் தீப்பொறி ஆறுமுகம்.
இவரது பேச்சால் எரிச்சலுற்று எதிர்க்கட்சியினர் மேடையிலேயே கற்களை வீசிய சம்பவங்களும், ஜீப்பை விட்டு ஏற்றிய சம்பவங்களுமெல்லாம் நடந்துள்ளன. ஆனாலும் அச்சம் இன்றி அதிரடி, சரவெடியை கொளுத்திபோட இவர் தங்கியது இல்லை.
19 வயதில் பேச ஆரம்பித்தார்
19 வயதில் இருந்தே பேச ஆரம்பித்த தீப்பொறி ஆறுமுகத்திற்கு இப்போது 77 வயது. ஏழு பெண் குழந்தைகளுக்கு பிறகு எட்டாவதாக பிறந்தவர் ஆறுமுகம்.
பேச்சு மீதான ஆர்வத்தால் பள்ளி காலங்களில் பேச்சு போட்டிகளிலேயே பல பரிசுகளை வென்றுள்ளார். பெரியார், அண்ணா பேச்சுக்கள் பிடித்து போனதால் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துள்ளார். பிறகு திமுகவுக்கு சென்றார்.
கல்லீரல், கிட்னி பிரச்சினை
இப்படிப்பட்ட தீப்பொறி ஆறுமுகம் இப்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதுதொடர்பாக ஜூ.வி இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எப்போதுமே இப்படி வந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கிடந்ததில்லை. என் வயிறு பெருசாகிக் கொண்டே வந்தது. பயங்கரமான வலி வந்தது. மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது எனக்கு கல்லீரலும் சரியில்லை... கிட்னியும் சரியில்லைனு டாக்டர் கூறிவிட்டார். அனைத்து சோதனைகளையும் செய்துவிட்டுதான், என்ன பிரச்னைனு உறுதியாச் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். எனக்கு எதுவும் ஆகாதுன்ற நம்பிக்கை மட்டும் இருக்கு" என்று கூறியுள்ள தீப்பொறி ஆறுமுகம், தான் பேச்சாளரான கதையும் விவரித்துள்ளார்.
அண்ணா கூட்டத்தில் பேச்சு
1967 தேர்தல்ல விழுப்புரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்துல பேசுறதுக்கு பேரறிஞர் அண்ணா வந்திருந்தார். இரவு இரண்டரை மணிக்கு அண்ணா வந்தார். நானும் ரெண்டு மணிநேரமா அவர் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் பேசிட்டு இருந்தேன். அண்ணா வந்துட்டாருன்றதுக்காக என் பேச்சை நிறுத்தச் சொன்னாங்க. அப்போ அண்ணா அவர்கள் என்னிடம் சைகையில் எனக்கு சோர்வா இருக்கு டீ குடித்துவிட்டு பேசுகிறேன் என்றார். தொடர்ந்து பேசிமுடித்தேன்.
அண்ணா கொடுத்த அடைமொழி
அண்ணா பேசும்போது, ‘ஆறுமுகம் பேச்சு தீப்பொறியாய் பறந்தது' என்று சொன்னார். மறுநாள் விழுப்புரம் கண்டமங்கலம் பகுதியில் பேசப்போகும்போது அங்கிருந்த ஒன்றிய செயலாளர், ‘தீப்பொறி' ஆறுமுகம் என்று அடைமொழி வைத்து போஸ்டர் ஒட்டினார். அது அப்படியே பல இடங்களில் தொடர ஆரம்பித்து இன்றுவரை ‘தீப்பொறி ஆறுமுகம்' என்ற பெயர் எனக்கு மிகப்பெரும் அடையாளமாக மாறியது.
பேச்சுக்கு வரவேற்பு
எம்.ஜி.ஆரைப் பத்தி பேசும்போது பிரபலமும் பிரச்னையும் அதிகமா ஆச்சு. எந்த ஊர்ல பேசுனாலும் அந்த ஊர் கடைக்காரங்க வந்து, ‘நீங்க பத்து மணிக்குமேல பேசுங்க. அப்பத்தான் நாங்க கடையை மூடிட்டு வந்து கேட்க முடியும்'னு சொல்வாங்க. மக்கள் எல்லோரும் இரவு நேரம் கட்சி மீட்டிங்கிற்கு ஆவலா காத்திருப்பாங்க, என்று கூறும் தீப்பொறி ஆறுமுகம், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய மூன்று பேரின் பேச்சு ஸ்டைலைக் கற்றுக்கொண்டாராம்.
மூவரிடம் கற்றுக்கொண்டேன்
"எனக்கு 3 பேரின் ஸ்டைலும் ரொம்ப பிடிக்கும். அவர்களோடு இருந்த நாட்களில் எனக்கு பல அனுபவங்கள கத்துகொடுத்துச்சு. அண்ணா எப்போதும் கடிகாரத்தில் மணி பார்த்துப் பேசுவதை, யாருக்கும் தெரியாமல்தான் செய்வார். அது போன்ற சின்ன சின்ன நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். ஒரு நாள் கருணாநிதி திடீர் என்று என்னைப் பேச அழைத்தார். நான் எந்த தயாரிப்பும் செய்யாத நிலையில் நான் அங்கு வந்திருந்த நிர்வாகிகளின் பெயரை சொல்லி எல்லாருக்கும் நன்றி என்று அன்றைய பேச்சை மிகவும் சுருக்கமாக முடித்தேன். ‘அறுமுகம் நல்லா சமாளிக்கிறியே'னு சிரித்தார் கருணாநிதி, என்று கூறியுள்ளார் தீப்பொறி ஆறுமுகம்.
நாக்கை அறுக்க முயற்சி
பேச்சு காரணமாக நடந்த அச்சுறுத்தல்களையும் ஆறுமுகம் விவரித்துள்ளார். 1992 ஆண்டு. ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரம். மீட்டிங் முடித்துவிட்டு வரும்போது மதுரை தங்கம் தியேட்டர் பக்கத்துல எனது நாக்கை அறுக்க ஒரு 'மொட்டை கத்தியை' வைத்து தேங்காய்கடை மாரியப்பன் என்பவர் என்னைத் தாக்கினார். எனது வாயின் இடது ஓரமாகவும் மார்பின் அருகிலும் வெட்டு ஏற்பட்டது. என்னை தாக்கியதால் மாரியப்பனுக்கு அதிமுகவில் பதவியும் வழங்கப்பட்டது. நான் அடுத்த மேடையில் என் நாக்கை அறுத்தாலும் சைகையில் பிரசாரம் செய்வேன் என்று பேசி பதிலடி கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆதங்கம்
உடல் நலம் சரியில்லாத இந்த நேரத்தில் தி.மு.க. உங்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் செய்கிறது? என்ற கேள்விக்கு, ஆதங்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் பதிலளித்துள்ளார் தீப்பொறி ஆறுமுகம்.
ஸ்டாலின் பிஸி
தலைவர் ஸ்டாலின் மிகவும் பிஸியா இருக்கிறார். அவரைச் சொல்லி குற்றம் இல்லை. அவருக்கு வேலை பளு அதிகமா இருக்கும். என்னாலும் அவரைப் போய் பார்க்க முடியாதபடி கால்கள் நல்லா வீங்கி வலி எடுக்க ஆரம்பித்துவிட்டது. இங்க உள்ள மாவட்ட நிர்வாகிகள் அப்பப்ப வந்து பாத்துகிறாங்க. 5 ஆயிரம் 10 ஆயிரம்னு எனக்கு செலவுக்குப் பணம் கொடுக்குறாங்க. திருச்சி சிவா 50 ஆயிரம் கொடுத்தாரு. தலைமையில இருந்து இன்னும் முடிவெடுக்கலை போல.
நம்பிக்கை
திமுக யாரையும் கைவிட்டதில்லை. கட்சி விரைவாக முடிவெடுத்து உதவி செய்வாங்கனு நினைக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரத்துக்கு மேல செலவாகிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறியுள்ளார். அவர் கட்சியை விட்டுக்கொடுக்காமல் பேசியதை போல, கட்சி அவரை விட்டுக்கொடுக்காமல் நிதி கொடுத்து உதவுமா என்பதே இவரை போல திமுகவுக்காக அயராது உழைத்த தொண்டர்களின் எதிர்பார்ப்பு.