இந்தியாவை சுத்தம் செய்ய 50 ஆண்டுகள் ஆகும்.. அன்றே கணித்து சொன்ன தீரர் சத்யமூர்த்தி!
- ராஜாளி
சென்னை: இந்தியாவிலிருந்து கடைசி ஆங்கிலேயன் வெளியேறியபிறகும் 50 ஆண்டுகள் ஆகும் இந்தியாவை சுத்தம் செய்ய என்ற தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாள் இன்று. 1887ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தில் பிறந்த சத்தியமூர்த்திக்கு எட்டு சகோதரர்கள். சிறு வயதிலேயே தந்தை காலமாகிவிட குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு இவருக்கு வருகிறது.
சென்னை சட்டக் கல்லூரியின் மாணவரான இவர் சுதந்திரப் போராட்டம் வலுவடைந்திருந்த 1920 ம் ஆண்டு தனது வழக்கறிஞர் பணியைத் துறந்து விட்டு அரசியலுக்கு வருகிறார். 1923ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். 1937ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, சென்னை மாகாண கவுன்சிலராக தேர்வானவர் பின்னர் 1939ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக பணியாற்றினார். அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. சென்னையில் தலைவிரித்து ஆடிய குடிநீர் பஞ்சத்தை தீர்க்க ஒரு குடிநீர் தேக்கத்தை கட்டுகிறார். பிரிட்டிஷ் அரசுடன் ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தி இந்த நீர் தேக்கத்தை கட்டியவர் அதற்கு பூண்டி குடிநீர்தேக்கம் என்று பெயரிடுகிறார். அந்த குடிநீர் தேக்கம். பின்னாளில் இவரது சீடர் காமராஜாரால் சத்யமூர்த்தி சாகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1940ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைதுசெய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்படுகிறார். 1942ம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு நடைபெறுகிறது இதில் தீவிரமாக கலந்து கொள்கிறார் சத்யமூர்த்தி இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்
காமராஜர்
பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் வழிகாட்டி சத்தியமூர்த்தி. தான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தபோது காமராஜரை செயலாளராக நியமித்து அழகுப் பார்த்தவர் சத்யமூர்த்தி. அதோடு அடுத்த சில காலத்தில் காமராஜரை தலைவராக்கிவிட்டு அவருக்கு கீழே சத்யமூர்தியே செயலாளராக அமர்ந்ததும் உண்டு. அரசியலில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய அரும் பாடம் இது. பின்னாளில் சத்திய மூர்த்திக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் காமராஜர் அவருக்கு உறுதுணையாக நின்ற வரலாறுகளும் உண்டு. காமராஜர் சத்யமூர்த்தி மீது கொண்ட பற்று காரணமாக தான் தேர்தலில் நின்று வெற்றிபெற்றது சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு அவரது மனையிவிடம் ஆசி வாங்கிவிட்டே முதலைமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அடையாளங்களுள் ஒன்றாக நிமிர்ந்து நிற்கும் சத்யமூர்த்தி பவனுக்கு அந்தப் பெயரை சூட்டியவரும் காமராஜர்தான். அந்த கட்டிடத்தை கட்டியவரும் காமராஜர்தான். இந்த வரலாறு இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் அந்த கட்டிடத்திலேயே குடிமிப் பிடி சண்டை நடத்த மாட்டார்கள்
பேச்சின் மீது காதல்
சத்யமூர்த்தி மிகச்சிறந்த பேச்சாளர். பேச்சின்மீது தணியாத காதல் கொண்டவர் அவர். ஒரு பேச்சாளனுக்கு மிக முக்கியமானது அவனது குரல் என்று கூறும் சத்யமூர்த்தி கம்பீரமான குரல்வளத்தை கொண்டவர். ஒலிபெருக்கி இல்லாமலே பெரும்கூட்டத்திற்கு கேட்கும் அளவுக்கு கணீர் குரலைப் பெற்றிருந்தார் சத்த்யமூர்த்தி. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று இருக்கக் கூடாது என்பதுவும், பிரிட்டிஷ் சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து அதன் பிடரி மயிரை படித்து ஆட்டுவேன் என்றதுவும், கடினமான சொற்கள் எலும்பை நோறுக்கிவிடாது என்பதுவும் அவரது புகழ்வாய்ந்த வாக்கியங்கள். தமிழ் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை சரளமாக தெரிந்தவர் ஒருமுறை தனது மகள் லெட்சுமிக்கு எழுதிய கடிதத்தில் பேச்சாளனின் அடிப்படை தகுதியே அவனது குரல்தான் என்று அந்தக் குரல் கம்பீரமாகவும், கணீர் என்றும், இனிமையானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.. இதயத்திலிருந்து பிறப்பதே பேச்சு என்று கூறும் அவர் ஒரு பேச்சாளன் இன்னும் கொஞ்சம் இவர் பேசியிருக்கலாமே என்று மக்கள் எண்ணும் இடத்தில் தனது பேச்சை நிறுத்திவிடவேண்டும் என்று கூறுகிறார். இவரது பேச்சுத் திறனைக் கண்டே எனக்கு 10 சத்தியமூர்திகள் வேண்டும் என்று கேட்கிறார் காந்தி. ஆனால் அதே காந்தியை தீரத்துடன் எதிர்த்தவர் சத்தியமூர்த்தி
சுபாஸ் சந்திர போஸ்
சத்யமூர்த்தி தனது கொள்கைகளை எங்கும் எதற்கும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்தவரல்ல. ஒருமுறை லாகூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது அதில் சுபாஸ் சந்திர போஸை நீக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறார் சத்தியமூர்த்தி. காந்தி இதை கண்டித்து இது தேசபக்தியற்ற செயல் என்று சத்தியமூர்த்திக்கு கடிதம் எழுதுகிறார். சுபாஸ் சந்திர போஸை நீக்கியதுதான் தேசபக்தியற்ற செயல் என்று மறுகடிதம் காந்திக்கு எழுதுகிறார். மற்றொருமுறை காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் உங்களைப் புகழ்ந்து பேச எனக்கு விருப்பமில்லை என்று பொட்டில் அடித்தாற்போல எழுதுகிறார். பர்மா அரசு ஒருமுறை நமது பாரதி பாடல்களை தடை செய்ததை காரணம் காட்டி சென்னை ராஜதனியிலும் அப்படிப்பட்ட ஒரு நிலை வருகிறது. சட்டமன்றத்தில் பாரதி பாடல்களை தடை செய்ய மசோதா கொண்டு வரப்பட்டபோது தன் பேச்சைத் தொடங்கிய சத்யமூர்த்தி நீங்கள் தாராளமாக எங்கள் பாரதியின் பாடல்களைத் தடைசெய்து பறிமுதல் செய்யலாம் எரிக்கவும் செய்யலாம்... எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை" என்று கூற சட்டசபையோ அதிர்ந்து போய்விடுகிறது. தொடர்ந்து முழங்கியவர் பாரதியின் பாடல்கள் அனைத்தும் தமிழர்களுக்கு மனப்பாடம், மனப்பாடத்தை பறிமுதல் செய்யும் எந்திரத்தை நீங்கள் கண்டுபிடித்தால் பாரதி பாடல்களை தடுத்து நிறுத்தலாம் என்று கர்ஜிக்கிறார். ஆகவே பாரதி பாடல்களை நீங்கள் தடை செய்ய ஆணையிடுவது வெட்டி வேலை என்று அப்போதைய அரசுக்கு புரியவைத்தார் சத்யமூர்த்தி.
பிற்போக்குத்தனமானது
பெண்கள் வேலைக்கு செல்வதை விட கல்லூரிகளுக்கு சென்று படிப்பதை விட குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு அதிகம் என்ற எண்ணம் கொண்ட சத்யமூர்த்தி குழந்தை திருமண தடைச் சட்டம், தேவதாசி ஒழிப்பு போன்ற சட்டங்களை கடுமையாக எதிர்த்தார். அவரது இந்த செயல்கள் பிற்போக்குத் தனமானவை என்று கூறப்பட்டாலும் அவற்றை எப்போதும் அவர் விட்டுக்கொடுத்ததும் இல்லை. பிற்போக்குத்தனமானது என்று உணர்ந்தாலும் அதை எங்கும் அவர் மறைக்கவும் இல்லை. சித்த ரஞ்சன்தாஸ் மோதிலால் நேரு ஆகியவர்களோடு இணைந்து சுயராஜ்ஜியக் கட்சி'யில் தீவிரமாக செயல்பட்டவர் 1943ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி, சென்னை மருத்துவமனையில் தன்னுடைய 55 வது வயதில் காலமானார்.