"தீயசக்தி"களிடம் சிக்கியுள்ள அதிமுகவை மீட்க ஜெ.தீபா பின்னே அணி திரள்வோம்!- பரபரக்கும் போஸ்டர்கள்
தீயசக்தி என்ற வார்த்தையை இப்போது திமுக தலைவர் கருணாநிதியிடம் இருந்து இப்போது மன்னார்குடியினர் பக்கம் திருப்பி விட்டனர். தீயசக்திகளிடம் சிக்கியுள்ள கழகத்தை மீட்க ஜெ.தீபா பின்னே அணி திரள்வோம் என்று பதிவ
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அதிமுகவில் கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் யார் ஏற்று நடத்துவது என்பதில் போட்டி உருவாகியுள்ளது.
சசிகலாதான் கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு பல தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு தென் மாவட்டங்களில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சசிகலாவிற்கும் தீபாவிற்கும் இடையே ஒரு போஸ்டர் யுத்தமே நடந்து வருகிறது.
தீபா ஆதரவு போஸ்ட்டர்
தென் மாவட்டங்களில் ஜெ.தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வந்த நிலையில் கரூர் அருகே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து, வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளியணை அடுத்த ஜெகதாபியில், 'ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள்' என்ற பெயரில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில், 'அம்மா அவர்களின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலரவும், நயவஞ்சகர்களின் பிடியில் இருந்து, அம்மாவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை காப்பாற்ற அணி திரள்வீர்' என, அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அணி திரள்வோம்
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம், மதுரா மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்த செந்துறை ஒன்றிய இளைஞர் பாசறை துணை செயலர் சந்திரசேகர், உறுப்பினர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர், தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து, மதுரா மத்துமடக்கி கிராமத்தில் நேற்று, சில டிஜிட்டல் பேனர்களை வைத்தனர்.
சின்ன அம்மா தீபா
அதில், 'துரோகிகளை கழகத்திலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும். மறைந்த ஜெயலலிதாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும்.'நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து அம்மாவின் கழக கொள்கை மற்றும் கோட்பாடுகளை காப்பாற்ற, அணி திரள்வீர், மக்களின் சின்ன அம்மா திருமதி ஜெ.தீபா அவர்களின் தலைமையில்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தீய சக்திகள்
சமூச வலைத்தளங்களில் சிலர், தீயசக்திகளிடம் சிக்கியுள்ள கழகத்தை மீட்க ஜெ.தீபா பின்னே அணி திரள்வோம் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த போஸ்டர் யுத்தம் எப்போது முடிவுக்கு வருமோ என்பது தெரியலையே?
மன்னார்குடி குடும்பம்
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை திமுக தலைவர் கருணாநிதியைத்தான் தீய சக்தி என கூறிவந்தார். அதிமுகவினரும் அதையே பின்பற்றினர். ஆனால் தற்போது மன்ன்னார்குடி கோஷ்டியை தீயசக்தி என அதிமுகவினரே விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.