அமீர் ஆபீஸுக்குள் புகுந்து சூறையாடிய திருடர்கள்... ஆட்கள் வந்ததால் தப்பிச் சென்றனர்
சென்னை: இயக்குநர் அமீரின் அலுவலகத்திற்குள் புகுந்த திருடர்கள் அலுவலகத்தில் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த முயற்சியை பாதியிலேயே விட்டு விட்டு போய் விட்டனர். இருப்பினும் போவதற்கு முன்பு அலுவலகத்தையே சூறையாடி விட்டனர்.
அமீரின் அலுவலகம் சென்னை கே.கே.நகர் சின்னப்பா தெருவில் உள்ளது. அங்கு முகமது என்பவர் அலுவலகத்தைப் பார்த்துக் கொள்ளும் பணியில் இருக்கிறார். நேற்று இறவு முகம்மது அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே போயுள்ளார். நள்ளிரவு வாக்கில் திரும்பி வந்தார். வந்து பார்த்தபோது அலுவலகம் திறந்து கிடந்தது. பொருட்கள் அனைத்தும் சிதறிப் போய்க் கிடந்தன.
இதையடுத்து அமீருக்குத் தகவல் கொடுத்தார் முகம்மது. அவர் விரைந்து வந்தார். போலீஸாருக்கும் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயங்களையும் சேகரித்தனர்.
அலுவலகத்தில் எதுவும் திருட்டுப் போகவில்லை. ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் திருடர்கள் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கே.கே. நகர் இந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசியுள்ளனர்.