2வது முறையாக இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி... திருச்செந்தூரில் பரபரப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் கொள்ளையர்களின் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால், அங்கிருந்த பணம் மற்றும் நகைகள் தப்பின. இரண்டாவது தடவையாக இந்த வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் சுப்பிரமணியசாமிகோவிலுக்கு சொநதமான இடத்தில் 2008ல் இந்தியன் வங்கி திறக்கப்பட்டது. வங்கியின் பக்கவாட்டு சுவர்களில் ஜன்னல்கள் உள்ளன. அடுத்தடுத்து இரண்டு நாட்கள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டதால் வங்கியை பூட்டி விட்டு ஊழியர்கள் அவரவர் ஊருக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் வங்கி மேலாளர் துரைபாலன் வங்கியை பார்வையிட வழக்கம் போல் வந்தார். அப்போது வங்கி கட்டிடத்தில் பக்காவாட்டு ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனே லாக்கர் இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அதை இரும்புகம்பியால் தாக்கியதற்கு அடையாள்ம் இருந்ததை பார்த்தார்.
கொள்ளையர்கள் நள்ளிரவில் இடது பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். கேமராவில் தங்களது உருவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக முன்னேச்சரிக்கையாக கேமராவின் வயரை துண்டுத்துள்ளனர். எச்சரிக்கை அலாரத்தின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் லாக்கர் இருந்த அறைக்கு சென்ற அவர்கள் அதை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது மிகவும் வலுவாக இருந்ததால் கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை.
அதனால் அதை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.இதனால் லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் அளவிலான பணம், நகைகள் தப்பியது. இதுகுறித்து வங்கி மேலாளர் உடனடியாக திருச்செந்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த போலீசார் வங்கியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வங்கியின் பக்கவாட்டு சுவர் பாதை, வடக்கு ரத வீதி வழியாக பக்கத்து தெரு வரை ஓடி நின்று விட்டது.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.