திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு... சென்னையில் "இயல்பு" வாழ்க்கை திரும்புகிறது???
சென்னை: வெள்ளம் தொடர்பான செய்திகள் வடிந்து, சென்னையின் பெயர் கொள்ளை, வழிப்பறி, அடிதடி என மற்றவற்றிலும் அடிபடத் தொடங்கியுள்ளது.
அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாகப் பொழிந்து இந்தாண்டு சென்னை மக்களை திக்குமுக்காட வைத்து விட்டது. அதிலும் குறிப்பாக இம்மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், சென்னையின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பலர் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதனால், சென்னை வெள்ளம், மக்கள் பாதிப்பு போன்ற செய்திகளே அதிகம் ஊடகங்களில் ஆக்கிரமித்திருந்தன. இந்நிலையில், வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
அதேசமயம் மக்களைப் போலவே திருடர்களும் "இயல்பு" வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர் போலும். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வழிப்பறி, கொள்ளை போன்ற செய்திகள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் சங்கிலித் திருட்டு நடந்துள்ளது. இதேபோல மேலும் பல திருட்டுச் செய்திகளும் நாளிதழ்களில் தலை காட்டத் தொடங்கியுள்ளன.
விடுவார்களா நெட்டிசன்கள்.. இதனை சமூகவலைதளங்களில் சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பியது என கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.