உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்க திருட்டில் ஈடுபட்ட கவுன்சிலர் கைது
கடலூர்: கடலூர் அருகே வரும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்க திருட்டில் ஈடுபட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பத்தில் வசிப்பவர் வெங்கடாசலம் (வயது 75). என்.எல்.சி. நிறுவனத்தில் ஓய்வு பெற்ற இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 6ஆம் தேதி இவரது வீட்டில் ஒரு கும்பல் புகுந்து வீட்டில் இருந்து 33 லட்சம் ரொக்கம், இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி, சரவணன், புகழேந்தி, கண்ணன், நடராஜன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆளுர் அகரத்தைச் சேர்ந்த மாயவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சசிகுமார், மணிவேல், ராஜசேகர் ஆகியோரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 33 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்தையும், மேலும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் 65 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தையும் ஒப்புக்கொண்டனர்.
விசாரணையில் மாயவேல் கூறியதாவது, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். இப்போது அனைவரும் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கிறார்கள். நானும் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் கொள்ளையடித்தேன் என கூறியுள்ளார். மாயவேலின் பதிலால் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.