நீ கில்லாடின்னா நான் கேடி மச்சி... ஃபேனுக்குள் ஒளித்து வைத்த நகையை அபேஸ் செய்த திருட்டுப் பசங்க!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர், பலத்த புத்திசாலித்தனமாக மின்விசிறிகளில் மறைத்து வைத்துச் சென்றிருந்த நகைகளை திருடர்கள் படு கில்லாடித்தனமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் உறவினர் வீடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், வீட்டை பூட்டி விட்டு சென்றால் கொள்ளை சம்பவங்கள் நடக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே இருக்கத் தான் செய்கிறது. அதற்காக செல்லும் இடங்களுக்கெல்லாம் வீட்டிலுள்ள நகை, பணத்தை எடுத்துச் செல்ல முடியாது.
எனவே, திருடர்களை ஏமாற்ற புதுச்சேரி அரசு ஊழியர் ஒருவர் நூதன ஐடியா ஒன்றை மேற்கொண்டார். ஆனால், அவரை விடவும் புத்திசாலியாக யோசித்து, அந்த நகைகளை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதுதான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர் காரைக்காலில் புதுவை அரசின் கால்நடைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரளா. இவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி புறப்பட்டுச் சென்றார் வேல்முருகன். முன்னதாக வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் பாதுகாப்பாக, மின்விசிறிகளில் உள்ள கப்புக்குள் போட்டு ஒளித்து வைத்தார் அவர். நகைகள் அதில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க அதன் மீது டேப்பை போட்டு ஒட்டியுள்ளார். இனிமேல் ஒரு பயலும் நகையைத் திருட முடியாது என்று பெருத்த நம்பிக்கை வந்தது அவருக்கு. அதன்பின் திருப்பதிக்கு புறப்பட்டு சென்ற வேல்முருகன், நேற்று அதிகாலையில் புதுச்சேரி திரும்பினார்.
வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் அறைக்குள் சென்றபோது அங்கு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் சிதறி கிடந்தன. இதனால் பதறிப்போன அவர் நகைகளை வைத்த மின்விசிறிகளை கவனித்தார்.
அந்த மின்விசிறிகளின் இறக்கைகள் அனைத்தும் மடக்கப்பட்டு, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன.
வீடு முழுவதும் நகைகளைத் தேடிய திருடர்கள், அனைத்து மின்விசிறியிலும் ஒட்டப்பட்டிருந்த டேப்களால் சந்தேகப்பட்டு அவற்றைப் பிரித்து பார்த்து நகைகளைத் திருடியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 85 பவுன் என வேல்முருகன் போலீசில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். அவற்றை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.