யானைகள் புத்துணர்வு முகாமுக்கு எதிர்ப்பு.. 23 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றிய மக்கள்!
தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். யானைகள் புத்துணர்வு முகாமால் காட்டு யானைகள் கிராமத்துக்குள் நுழைவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் தமிழகத்தில் இருந்து 26 கோயில் யானைகள், பாண்டிச்சேரியில் இருந்து 2 கோயில் யானைகள் மற்றும் தனியார் அமைப்பின் கீழ் பராமரிக்கப்படும் 5 யானைகள் என மொத்தம் 33 யானைகள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளன.
யானைகள் புத்துணர்வு முகாம்
இந்த முகாமில் யானைகளுக்கு மூலிகை உணவுகள், நடை பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
23 கிராமங்களில் கறுப்புக்கொடி
இந்நிலையில் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாமை நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யானைகள் முகாமை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 23 கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
விளை நிலங்கள் சேதம்
வனப்பகுதியை ஒட்டியுள்ள தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடத்தப்படுவதால் காட்டு யானைகள் கிராமத்துக்குள் நுழைந்துவிடுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த காட்டு யானைகள் விளைநிலங்களையும் சேதப்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அப்பாவி மக்கள் உயிரிழப்பு
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்துணர்வு முகாமால் காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் நுழைந்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிராம மக்கள் விளக்கம்
இன்று காலை கூட முகாம் பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்ததாக தெரிவித்த கிராம மக்கள் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காகவே 23 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.