நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்... கொந்தளிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு!
நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு தேனி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தேனி: சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தேனி மாவட்ட விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.
நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்களின் எதிர்ப்புகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட விவசாயிகளைப் பொறுத்தவரையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் முல்லை பெரியாறு, வைகை மற்றும் இடுக்கி என சுமார் 20 அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர். மேலும் அம்பரப்பர் மலையை குடைந்து 2 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 11,25,000 டன் பாறையை 1000 டன் வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சுற்றுச் சூழல் கேட்டை மட்டும் அல்ல மக்கள் வாழவே முடியாத ஒரு நிலையை உருவாக்கும்.
இதனால் வனவிலங்குகள் மலைகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் தஞ்சமடையும் நிலை வரும் என அச்சப்படுகின்றனர். அத்துடன் நியூட்ரினோ ஆய்வுக்கான காந்த கருவியை குளிர்விக்க ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. குண்டலநாயக்கன்பட்டி முல்லைபெரியாற்று பகுதியில் உறைகிணறு அமைத்து தண்ணீர் எடுக்க பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்துள்ளனர். இதற்காக பெரியாறு அணையில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கவும் உள்ளனர். முல்லைப் பெரியாறில் 21 டி.எம்.சி. நீர்தான் ஆண்டு முழுவதுமே கிடைக்கிறது. இதில் 10 டி.எம்.சி நீரை நியூட்ரினோவுக்கு செலவிட்டால் பெரியாறு பாசனத்தை நம்பியுள்ள விவசாயமே பொய்த்து போகும் என்பது விவசாயிகளின் அச்சமாகும்.
ஆகையால் இத்தகைய கேடுவிளைவிக்கும் மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தேனி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.