குரங்கணி தீ விபத்து- அதுல்ய மிஸ்ரா வளையத்தில் கொழுக்குமலை எஸ்டேட்?
குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணையில் கொழுக்குமலை எஸ்டேட், ட்ரெக்கிங் கிளப்புகள் பற்றியும் விசாரிக்கப்பட இருக்கிறது
சென்னை: குரங்கணி காட்டுத் தீ குறித்து விசாரணை நடத்துவதற்காக, பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசு. தீ விபத்து தொடர்பாக கொழுக்கு மலை எஸ்டேட் மீதும் பல குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. இதுகுறித்து பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எஸ்டேட் உரிமையாளர் அதிபன் போஸ் என்கின்றனர் முதுவார் பகுதிவாசிகள்.
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மகளிர் தின ஸ்பெஷல் ட்ரெக்கிங் என்ற பெயரில் வழிநடத்தப்பட்ட இந்தக் குழுவில் இருந்த சிலர் மலையேற்றப் பயிற்சியில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள் என்ற தகவலும் வெளியானது.
இதுகுறித்து சென்னை ட்ரெக்கிங் கிளப் தரப்பில் வெளியான அறிக்கையில், மலையில் இருந்து கீழிறங்கும்போது மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால்தான் தப்பிக்க வழியில்லாமல் போய்விட்டது. அங்குள்ள விவசாயிகள் தீ வைத்ததால்தான் இவ்வாறு நடந்தது. அனுமதிக் கட்டணம் செலுத்திவிட்டு முறையாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோம். நாங்கள் செல்லும்போது, தீ பிடிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை' எனக் கூறியிருந்தனர்.
ட்ரெக்கிங் கிளப் அடாவடி
இதற்குப் பதில் கொடுத்த சூழலியியல் ஆர்வலரான எழுத்தாளர் முருகவேல், வனத்துறையின் கருத்தையே சென்னை ட்ரெக்கிங் கிளப் ஆட்கள் தெரிவிக்கின்றனர். விபத்து நடப்பதற்கு முன்பே, மலையில் தீப்பற்றி எரிவது குறித்து சிலர் பதிவிட்டுள்ளனர். விவசாயிகளும் வனத்தில் வாழும் மக்களும் காட்டுக்குத் தீ வைக்கிறார்கள் என வனத்துறைதான் இப்படியொரு பழிச்சொல்லைக் கூறும். அவர்களுக்கும் குழந்தைகள், கால்நடைகள் என ஏராளம் இருக்கின்றன. அவர்கள் ஏன் தீ வைக்க வேண்டும்? பழங்குடிகள் மீது பழியைப் போட்டு, அவர்களுக்கு இன்னும் கொடுமைகளைச் செய்ய நினைக்கிறார்கள்' எனக் கொந்தளித்தார்.
அதுல்ய மிஸ்ரா விசாரணை
அதேநேரம், ' காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்' எனத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக நியமித்திருக்கிறார். இதுகுறித்து வெளியான அரசு அறிவிப்பில், ' குரங்கணி காட்டுத் தீ சம்பவத்துக்கான காரணங்கள் குறித்தும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பது குறித்தும் அதுல்ய மிஸ்ரா விரிவாக ஆய்வு நடத்துவார். இந்த விசாரணை இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொழுக்கு மலை எஸ்டேட்
இந்தத் தகவலால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது கொழுக்குமலை எஸ்டேட் நிர்வாகம். வனத்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் பேசினோம். " குரங்கணி பகுதிக்கு வனச் சுற்றுலா என்ற பெயரில் ஆட்டம் போடுபவர்களுக்கான புகழிடமாக கொழுக்கு மலை எஸ்டேட் இருக்கிறது. 'நூற்றாண்டு பழமையான எஸ்டேட்; மேஜிக்கல் சன்ரைஸ்; ட்ரெக்கிங் சொர்க்கம்; இயற்கையின் வனப்பை கண்டு களிக்கும் வசதி; சுவையான உணவுகள்' என அவர்கள் விளம்பரம் செய்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதற்கென்றே சில தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
எஸ்டேட் விளம்பரம்
'உங்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்ல; சூழலியலின் இன்னொரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறோம்' என கவர்ச்சிகரமான ஆஃபர்களை அறிமுகப்படுத்துகின்றனர். சூழல் பற்றிய புரிதல் இல்லாத இவர்களை நம்பித்தான் பயணிகள் வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் பலர் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். முதுமலை பந்திப்பூர் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பயணி ஒருவர், இந்த ட்ரெக்கிங் கிளப்பை நம்பி வந்திருந்தார். காட்டு யானைக்கு அருகில் அழைத்துச் சென்று அவரைப் படம் எடுக்க வைத்திருக்கிறார்கள். இதனை எதிர்பார்க்காத காட்டு யானை, வெளிநாட்டுப் பயணியை அடித்துக் கொன்றுவிட்டது. ' நோ ஆல்கஹால்' எனக் கண்டிப்புடன் கூறும் ட்ரெக்கிங் கிளப்பின் உறுப்பினர்கள் சிலர், மலையேற்றம் முடியும் வரையில் போதையில்தான் இருப்பார்கள். உணவு முதற்கொண்டு அனைத்திலும் அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். இவர்களால் பணத்தை இழந்து நொந்து போனவர்கள்தான் அதிகம்" என வேதனைப்பட்டார்.
அடைக்கலம் தரும் எஸ்டேட்
வன சுற்றுலா, ஃபாரஸ்ட் ட்ரெக்கிங், கேம்ப் ஃபயர் என விதம்விதமான பெயர்களில் கிளம்பும் இவர்களுக்கு தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், ஆபத்பாந்தவனாக இருப்பது கொழுக்கு மலை எஸ்டேட்தான். சுற்றுலா பயணிகளின் வசதி வாய்ப்பைப் பொறுத்து, எஸ்டேட் நிர்வாகத்துடன் கைகோர்த்துக் கொண்டு பணத்தைக் கறக்கின்றனர். ' நமக்கெல்லாம் டஸ்ட் டீ தான் கிடைக்கிறது. இப்படியொரு சுத்தமான ஆர்கானிக் டீயை நீங்கள் அருந்தியதுண்டா.. இதன் சுவைக்காவே வெள்ளையர்கள் இந்த இடத்தில் அடிமையாக இருந்தனர். விக்டோரியா மகாராணிக்கே இந்த டீத்தூள்தான் சென்று சேர்ந்தது' என பயணிகளை வியக்க வைக்கின்றனர்.
தீ தொடர்ந்து எரிந்தது?
பொதுவாக, ஈகோ டூரிஸம் வருகிறவர்களுக்கு இதுபோன்ற தகவல்கள் கூடுதல் ஆர்வத்தை அளிக்கும். அந்த ஆர்வம்தான் இவர்களின் முதலீடு. குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது தீப்பிடித்து எரிந்துகொண்டுதான் இருந்தது. இது தெரிந்தும் வருகிற வருமானத்தை இழக்க விரும்பாத சிலர், அப்பாவி மக்களை அழைத்து வந்து பலி கொடுத்துவிட்டனர்.
கொழுக்குமலை எஸ்டேட்
குரங்கணியில் இப்படியொரு சம்பவம் இதற்கு முன்பாக நடந்தது இல்லை. ட்ரெக்கிங் கிளப்புகளுக்கும் கொழுக்கு மலை எஸ்டேட்டுக்கும் உள்ள தொடர்பை, புதிதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஆய்வு நடத்த வேண்டும். எஸ்டேட் ஊழியர்களின் தவறான போக்கால், தீப்பிடித்ததா என்பதும் ஆய்வுக்குரியது. எந்தவொரு வன சுற்றுலாவுக்கும் உள்ளூர் பழங்குடிகளை அழைத்துச் செல்வது மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். வனத்தின் சூழல்களையும் காட்டு விலங்குகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக அறிந்தவர்கள் அவர்கள்தான். அவர்களைப் புறக்கணித்துவிட்டுச் செல்வதால், உயிருக்குத்தான் ஆபத்து விளையும். மேற்குத் தொடர்ச்சி மலைகளை குறிவைத்து நடக்கும் சுற்றுலாக்களை எல்லாம் முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. கூடவே, வரைமுறையற்றுப் பெருகும் கட்டடங்களை அப்புறப்படுத்துவதும் மிக முக்கியமானது" என்பதும் சூழல் ஆர்வலர்கள் குரல். அதுல்ய மிஸ்ராவின் விசாரணையில் கொழுக்கு மலை எஸ்டேட் அதிபரான அதிபன் போஸ் என்ன பதில் சொல்லப் போகிறார்' என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.