கொழுக்குமலையை ரசிக்க சென்றவர்களை காவு கொண்ட காட்டுத் தீ- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
குரங்கணி நிகழ்ந்த காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
மதுரை: கொழுக்குமலைக்கு பயணம் சென்று குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலத்த காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் இன்று மரணமடைந்தனர். இதன் மூலம், காட்டுத்தீ விபத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்த பெண்களின் பெயர் சாய் சாய் வசுமதி என்பதாகும். இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர். இதே போல சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி சிகிச்சை பலனின்றி மதுரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்த 15 பேர் மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 9 பேரில் ஜெயஸ்ரீ என்ற பெண் அனுமதிக்கப்பட்ட அன்றே ஏர் ஹெலிகாப்டர் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சென்னை வேளச்சேரி நிஷா, ஈரோடு கவுந்தப்பாடி ஆசிரியை திவ்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலியாயினர். எஞ்சிய 6 பேரில் மீனா ஜார்ஜ் அப்போலோவுக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி மதுரை கென்னட் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர்.
ஈரோட்டைச் சேர்ந்த விவேக் காட்டுத்தீயில் பலியான நிலையில் அவரது மனைவி திவ்யா சிகிச்சை பலனின்றி மறுநாளே உயிரிழந்தார். கென்னட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த விபின் என்பவரது மனைவி திவ்யா,28 சிகிச்சை பலனின்றி 14ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கு 99 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இவரது கணவர் விபின் இதே விபத்தில் சம்பவ இடத்தில் ஏற்கனவே பலியானார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் தேதி பரிதாபமாக மரணமடைந்தனர்.
மறுநாளில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைய தினம் கோவையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி,26 சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதேபோல சென்னையைச் சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும் இன்று மரணமடைந்தார் இதன் மூலம், காட்டுத்தீ விபத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் எம்கே ரோடு கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் சாய் வசுமதி, 26 வயதாகும் இவர், எம்சிஏ படித்து விட்டு சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். சென்னை டிரெக்கிங் கிளப் மூலம் கொழுக்குமலைக்கு சென்ற அவர், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கடந்த 10 நாட்களாக சாய் வசுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.