தேனியில் வருகிறது "பார்ஸ்டல்" வசதியுடன் கூடிய சிறை.. ஜெ. அறிவிப்பு
சென்னை: தேனி மாவட்டத்தில் 200 பேர் தங்கும் வகையில், ‘பார்ஸ்டல்' பள்ளியை உள்ளடக்கிய மாவட்டச் சிறைச்சாலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபை விதி-110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வாசித்த அறிக்கையில், "குற்றவாளிகளை சிறையில் அடைத்து சீர்திருத்தி, மறுவாழ்வளித்து, விடுதலைக்குப் பின் அவர்கள் சமுதாயத்தின் அங்கமாக திகழ்வதற்கான பணியை செய்து கொண்டிருக்கும் சிறைத் துறையை மேம்படுத்துவதிலும், சிறைத் துறை பணியாளர்களுக்கும், சிறைவாசிகளுக்கும் கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் சிறைச்சாலைகள் ஏதும் இல்லாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிறைவாசிகள் தற்போது மதுரை மத்திய சிறைக்கும், வளரிளம் சிறைவாசிகள் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பார்ஸ்டல் பள்ளிக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர்.
பார்ஸ்டல் பள்ளி
எனவே, இச்சிறைவாசிகளை தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களையவும், மதுரை மத்தியச் சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் இட நெருக்கடியைக் குறைக்கவும், 14 கோடி ரூபாய் செலவில் தேனி மாவட்டத்தில் 200 சிறைவாசிகள் தங்கும் வகையில், ‘பார்ஸ்டல்' பள்ளியை உள்ளடக்கிய ஒரு மாவட்டச் சிறை அமைக்கப்படும்.
சிறைப் பணியாளர்களுக்கு 100 குடியிருப்பு
சிறைப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் அவசர கால நேர்வுகளில் பணிபுரிந்திட, சிறைக் களப் பணியாளர்கள் சிறை வளாகத்திலேயே வசிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, சிறைப் பணியாளர்களின் குடியிருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் 100 குடியிருப்புகள் கட்ட அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
100 குடியிருப்புகள்
அதன்படி 2012-2013 மற்றும் 2013-2014 ஆம் ஆண்டுகளில் தலா 100 குடியிருப்புகளை கட்ட அரசு ஆணையிட்டுள்ளது. அக்கொள்கை முடிவின் தொடர்ச்சியாக, 2014-2015 ஆம் ஆண்டில் 13 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் 100 குடியிருப்புகள் கட்டப்படும். அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், சிறைவாசிகள் மற்றும் சிறைத் துறைப் பணியாளர்கள் கூடுதல் வசதி பெற வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
அது என்ன பார்ஸ்டல்...?
பார்ஸ்டல் என்பது இங்கிலாந்திலிருந்து நமது நாட்டுக்கு வந்த வார்த்தையாகும். 18 வயதுக்குட்பட்ட, குற்றவாளிகள் சிறார் குற்றவாளிகள் ஆவர். அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுவர். அதேபோல 18 முதல் 21 அல்லது 23 வயது வரையிலான குற்றவாளிகளை அடைக்கும் இடம்தான் இந்த பார்ஸ்டல். இதுவும் கூட கிட்டத்தட்ட சிறார் சீர்திருத்தப் பள்ளி போலத்தான். இந்த வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிகள்தான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
தற்போது தமிழகத்தில் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இந்த பார்ஸ்டல் பள்ளிகள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.