ப்ளஸ் டூ தேர்வில் ‘பிட்’ அடித்த மூவர் சிக்கினர் – 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தேனி: பிளஸ் 2 தேர்வில் ‘பிட்' அடித்த 3 மாணவர்கள் அதிகாரியிடம் சிக்கினர். இவர்களை கண்காணிக்கவில்லை எனக்கூறி 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. நேற்று கணக்குப்பதிவியல், வேதியியல் தேர்வுகள் நடைபெற்றன. தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் சுமார் 300 மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கான இணை இயக்குநர் செல்வராஜ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது வேதியியல் தேர்வு எழுதிய 2 மாணவர்கள், கணக்குப்பதிவியல் தேர்வு எழுதிய ஒரு தனித்தேர்வர் உள்ளிட்ட மூவர் பிட் அடித்ததை கண்டுபிடித்தார். உடனே 3 பேரையும் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினார்.
இவரது பரிந்துரையின்பேரில் தேர்வறையில் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்த வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள், வைகை அணை அரசு பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர் என 3 ஆசிரியர்களை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஓசூரில் வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய விவகாரம் பரபரப்பு அடங்குவதற்குள் தேனியில் மூன்று மாணவர்கள் பிட் அடிக்க ஆசிரியர்கள் உதவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.