ஜெ.வுக்காக தீக்குளிக்க முயற்சித்த தேனி காவலர் நீச்சலில் உலக சாதனை படைத்தவர்
சென்னை: ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி நேற்று டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தேனி போலீஸ்காரர் உலக சாதனைப் படைத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டதை எதிர்த்து தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (40 ) என்றும், அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் காவலராக பணி புரிந்து வருவதும் கண்டறியப்பட்டது. ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி, தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
தீக்குளிக்க முயன்ற வேல்முருகன் 36 அடி உயரத்தில் இருந்து அரை அடி மணலில் குதித்தும், 81 அடி உயரத்தில் இருந்து 4அடி ஆழமுள்ள தண்ணீரில் தலைகீழாக பாய்ந்தும் சாதனை படைத்தவர். 157 கி.மீ., தூரம் இடைவிடாத நீச்சல் அடித்ததற்காக இவர் உலக சாதனையும் படைத்துள்ளார்.
மேற்கூறிய சாதனைகளுக்காக வேல்முருகன் ஜெயலலிதாவைச் சந்தித்து பாராட்டும் பெற்று உள்ளார் எனக் கூறப்படுகிறது.
காவலர் உடையில் தீக்குளிக்க முயன்றதால், வேல்முருகன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.